நெல் மூட்டைகளை சாலையில் வைத்து விவசாயிகள் மறியல்


நெல் மூட்டைகளை சாலையில் வைத்து விவசாயிகள் மறியல்
x
தினத்தந்தி 14 Sep 2021 5:35 PM GMT (Updated: 14 Sep 2021 5:35 PM GMT)

அருண்மொழித்தேவன் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி நெல் மூட்டைகளை சாலையில் வைத்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை:
அருண்மொழித்தேவன் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி நெல் மூட்டைகளை சாலையில் வைத்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேரடி கொள்முதல் நிலையம்
மயிலாடுதுறை அருகே அருண்மொழித்தேவன் ஊராட்சியில் கடந்த ஆண்டு தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதன் மூலம் அருண்மொழித்தேவன், உக்கடை, கோட்டூர், பில்லாளி, கங்கணம்புத்தூர், தேவனூர், கடுவங்குடி உள்ளிட்ட கிராம விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்து வந்தனர். 
இந்த ஆண்டு  குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்த நெல்லை அருண்மொழித்தேவன் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 5 ஆயிரம் முட்டைகளுக்கு மேல் விவசாயிகள் அடுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக காத்திருந்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை.  இதுகுறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடடிக்கை எடுக்கவில்லை.
சாலையில் நெல் மூட்டைகள் வைத்து மறியல்
 கொள்முதல் நிலையம் திறக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் டிராக்டரில் நெல் மூட்டைகளை எடுத்துவந்து நீடூர் மெயின்ரோட்டில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் ராகவன், மயிலாடுதுறை பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் சப்-இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்ட கலந்து சென்றனர். 
இந்த மறியலால்  மயிலாடுதுறை-மணல்மேடு சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story