விபத்தில் சிக்கிய லாரிகளால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


விபத்தில் சிக்கிய லாரிகளால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2021 6:25 PM GMT (Updated: 14 Sep 2021 6:25 PM GMT)

புலியூர் அருகே விபத்தில் சிக்கிய லாரிகளால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் டிரைவர் காயம் அடைந்தார்.

வெள்ளியணை
நின்ற லாரி மீது மோதல்
கரூர் மாவட்டம் பரமத்தி பகுதி கிரஷரிலிருந்து எம் சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர் நோக்கி டிப்பர் லாரி ஒன்று கரூர்-  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது புலியூர் அருகே உள்ள உப்பிடமங்கலம் மேம்பால பிரிவில் அந்த டிப்பர் லாரி வந்த போது எதிர்பாராதவிதமாக பழுதாகி நின்று கொண்டிருந்த மற்றொரு டிப்பர் லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது.
 இதில் மோதிய டிப்பர் லாரியின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. இதனால் அந்த லாரியின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் திண்டுக்கல் மாவட்டம் டிகூடலூர் பகுதியை சேர்ந்த டிரைவர் சுப்பாராம் (வயது 55) காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அபயக்குரல் எழுப்பினார். 
உயிருடன் மீட்பு
இதைக்கேட்ட அப்பகுதியில் இருந்தவர்கள் இது குறித்து வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளியணை போலீசார் கரூர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி டிரைவர் சுப்பாராமை உயிருடன் மீட்டனர். 
இதனையடுத்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக காயங்களுடன் இடிபாடுகளில் சிக்கித்தவித்த டிரைவர் சுப்பாராம் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்றுப் பாதையில் வாகனங்கள் சென்றன.

Related Tags :
Next Story