லாரி மோதி கல்லூரி மாணவி பலி


லாரி மோதி கல்லூரி மாணவி பலி
x
தினத்தந்தி 14 Sep 2021 6:28 PM GMT (Updated: 14 Sep 2021 6:28 PM GMT)

கீழ்பென்னாத்தூரில் லாரி மோதி கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூரில் லாரி மோதி கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். 

கல்லூரி மாணவி

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள விழுப்புரம் மாவட்டம் காட்டுசித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். 

சென்னை போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் குணசத்யா (வயது 18). 

திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

இவருக்கு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கீழ்பென்னாத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடக்க இருந்தது.

இதற்காக விழாவுக்கு தேவையான பொருட்களை திருவண்ணாமலையில் வாங்கிக்கொண்டு, ஆறுமுகம், குணசத்யா ஆகிய இருவரும் இன்று பகல் 12 மணி அளவில் கீழ்பென்னாத்தூர் வழியாக தனித்தனியாக ஸ்கூட்டரில் வந்தனர். 

லாரி மோதி பலி

அங்குள்ள மசூதி அருகில் முன்னால் வந்து கொண்டிருந்த குணசத்யா ஸ்கூட்டர் மீது சர்க்கரை மூட்டைகளுடன் சென்னை நோக்கி சென்ற லாரி  மோதியது. 

இதில் காயமடைந்த அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

‌‌ விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்- இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து  தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.

மஞ்சள்நீராட்டு விழா நடைபெற இருந்த நிலையில் விபத்தில் மாணவி இறந்தது காட்டு சித்தாமூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story