ஊராட்சி தலைவர்களின் பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை. கலெக்டர் எச்சரிக்கை


ஊராட்சி தலைவர்களின் பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை. கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Sep 2021 6:35 PM GMT (Updated: 14 Sep 2021 6:35 PM GMT)

ஊராட்சி தலைவர்களின் பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டு கலெக்டர் தெரிவித்தார்.

வேலூர்

ஊராட்சி தலைவர்களின் பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டு கலெக்டர் தெரிவித்தார்.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தல்

வேலூர் மாவட்டத்தில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, பேரணாம்பட்டு ஆகிய ஒன்றியங்களுக்கு 6-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் 9 மாவட்ட கவுன்சிலர், 88 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 154 பஞ்சாயத்து தலைவர்கள், 1,302 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

வேலூர், அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய ஒன்றியங்களில் 9-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் 5 மாவட்ட கவுன்சிலர், 50 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 93 பஞ்சாயத்து தலைவர், 777 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
பரிசு பொருட்களை தடுக்க நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் 1,331 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 252 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாறுபாடுகள் ஏற்படக்கூடும். தேர்தல் நடைபெறும் நாள் அன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பரிசுப் பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க சோதனைகள் தீவிரப்படுத்தப்படும். திருவண்ணாமலை மாவட்ட எல்லை மற்றும் ஆந்திர எல்லையோரம் கூடுதல் சோதனை சாவடி அமைத்து சோதனை நடத்தப்படும்.

ஏலம் விட்டால் நடவடிக்கை

திருமண மண்டபங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். தேர்தல் அதிகாரிகள் அனுமதி இல்லாமல் திருமண மண்டபங்களை வாடகைக்கு விடக்கூடாது. வேலூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடுவது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வேலூர் மாவட்டத்தில் பேனர் வைக்கக்கூடாது.
அனுமதி இல்லாமல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது. சுவர் விளம்பரங்கள் செய்யக்கூடாது. அதிக கூட்டத்தைகூட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது. வெற்றி பெற்றவர்கள் 20, 22-ந் தேதிகளில் பதவி ஏற்றுக்கொள்ளலாம். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story