உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி


உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி
x
தினத்தந்தி 14 Sep 2021 6:55 PM GMT (Updated: 14 Sep 2021 6:55 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.

நெல்லை:

பயிற்சி முகாம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக வருகிற 6-ந் தேதியும், 9-ந் தேதியும் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

இதையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அந்தந்த பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் நேற்று சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.

தேர்தல் அலுவலர்கள்

இதில் எப்படி வேட்பு மனுக்களை பெற வேண்டும். விண்ணப்பங்கள் எப்படி நிரப்பப்பட்டிருக்க வேண்டும். எந்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்த விண்ணப்பங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனில் தேர்தல் நடத்தும் அதிகாரியான சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் குமாரதாஸ் தலைமையில் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பாலசுப்பிரமணியன், மணி மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வள்ளியூர்

இதைப்போல் வள்ளியூர் யூனியன் அலுவலகத்தில் வள்ளியூர் யூனியன் தேர்தல் நடத்தும் அலுவலர் நெல்லை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலரும், நெல்லை உதவி கலெக்டருமான (பொறுப்பு) மூர்த்தி தலைமை தாங்கி அங்குள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும், உதவி தேர்தல் அலுவலர்களுக்கும் பயிற்சி அளித்தார்.
இதைப்போல் அனைத்து பஞ்சாயத்து யூனியன் அலுவலங்களிலும் நேற்று பயிற்சி வகுப்பு நடந்தது.

Next Story