தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 14 Sep 2021 8:26 PM GMT (Updated: 14 Sep 2021 8:26 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான தண்ணீர் தொட்டி

ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டையில் பழமையான மேல்நிலை தண்ணீர் தொட்டி உள்ளது. அதன் சுவர் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து விழுந்த வண்ணம் உள்ளது. கனமழை நேரத்தில் இடிந்து விழுந்து விடும் ஆபத்து உள்ளது. இந்த ஆபத்தான தண்ணீர் தொட்டியை அகற்ற வேண்டும். 

-சுரேஷ்பதி, சித்தையன்கோட்டை.

குண்டும், குழியுமான சாலை 

சாணார்பட்டி ஒன்றியம் வங்கமனூத்து அருகே உள்ள கொத்தபுளிபட்டியில் இருந்து அதிகாரிபட்டி வரை உள்ள சாலை சேதம் அடைந்து விட்டது. குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் சாலையால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

-பாலசுப்பிரமணி, கொத்தபுளிபட்டி.

அபாய மின்கம்பம்

குஜிலியம்பாறை தாலுகா பாளையம் பேரூராட்சி முத்தம்பட்டியில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்துடன் மக்கள் நடமாடும் நிலை உள்ளது. இந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும். 

-செல்வராஜ், முத்தம்பட்டி.

இருளில் மூழ்கும் தெரு 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் வாஞ்சிநாதன் தெருவில் தெருவிளக்கு எரியவில்லை. இரவில் அந்த தெருவே இருளில் மூழ்கிவிடுகிறது. இந்த தெருவிளக்கை சரிசெய்து எரிய வைக்க வேண்டும். 

-கணேசன், தாமரைக்குளம்.

மாணவர்கள் அவதி

திண்டுக்கல் அருகேயுள்ள பொன்மாந்துறையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் உள்ளனர். அதேபோல் வேலைக்கு செல்பவர்களும் பலர் உள்ளனர். ஆனால் இந்த ஊர் வழியாக முறையான பஸ் வசதி இல்லை. இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பஸ் வசதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பார்களா? 

-தினகரன், பொன்மாந்துறை.

தெருவிளக்கு எரியுமா?

பழனி திலகர்தெருவில் கடந்த சில நாட்களாக ஒரு தெருவிளக்கு எரியவில்லை. இருள் சூழ்ந்து காணப்படும் அந்த பகுதி வழியாக செல்வதற்கு பெண்கள் அச்சப்படுகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும். 

-சீனிவாசன், பழனி.

சேதமடைந்த சாலைகள் 

ஆத்தூர் தாலுகாவில் பாளையங்கோட்டை, கூலம்பட்டி, காமன்பட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சாலைகள் சேதம் அடைந்துவிட்டன. இதனால் அந்த சாலைகள் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட விரைவாக வரமுடியவில்லை. எனவே சாலைகளை சீரமைக்க வேண்டும். 

-ரமேஷ்குமார், பிரவான்பட்டி.


Next Story