நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரே நாளில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம்


நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரே நாளில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம்
x
தினத்தந்தி 16 Sep 2021 12:32 AM GMT (Updated: 16 Sep 2021 12:32 AM GMT)

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் 2 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

நாமக்கல்:
காதல் ஜோடி
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள எருமப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னக்குட்டி. இவருடைய மகன் விஜய் (வயது 26). இவரும் அதே பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மகள் கனிமொழியும் (19) கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களின் காதல் பெற்றோருக்கு தெரியவரவே கனிமொழியை வேறு நபருக்கு திருமணம் செய்து கொடுக்க அவர்கள் முயற்சி செய்து உள்ளனர். இதையறிந்த காதல் ஜோடியினர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் திருப்பூரில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று இவர்கள் இருவரும் பாதுகாப்பு கேட்டு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
பரபரப்பு
இதேபோல் திருச்செங்கோடு அருகே உள்ள இறையமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் சக்திவேல் (28). இவரும் பிலிக்கல்மேடு பகுதியை சேர்ந்த ஜீவா (21) என்ற பெண்ணும் ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடியினர் அத்தனூர் அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த 2 காதல் ஜோடியினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரே நாளில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story