விவசாயியை வெட்டிக் கொன்ற மகன் கைது


விவசாயியை வெட்டிக் கொன்ற மகன் கைது
x
தினத்தந்தி 16 Sep 2021 7:18 PM GMT (Updated: 16 Sep 2021 7:18 PM GMT)

விருத்தாசலம் அருகே விவசாயியை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே பரவலூர் ராமதாஸ் நகர் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 65) விவசாயி. இவருக்கு அம்சவல்லி என்ற மனைவியும், அறிவுசுடர் (35) என்ற மகனும், சுமதி (30) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று வீட்டு அருகே உள்ள விவசாய நிலத்தில் மகாலிங்கம் பலத்த வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
 இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித்ஜெயின் தலைமையிலான போலீசார்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர்

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மகாலிங்கம் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. மேலும் விசாரணையில், மகாலிங்கத்தின் மகன் அறிவுசுடர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை  விவசாய நிலத்தில் சங்கிலியால் கட்டி வைத்து பராமரித்து வந்தனர். தினந்தோறும் அறிவுசுடருக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை அவரது குடும்பத்தினர் கொடுத்து வந்தனர். 
இந்தநிலையில் மகாலிங்கம் நேற்று முன்தினம் தனது வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மணிலாவை பார்ப்பதற்காக சென்றார். பின்னர் அவர் அங்கேயே கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார். 

கைது

நள்ளிரவில் அறிவுசுடர் சங்கிலியை அறுத்து கொண்டு வந்து மகாலிங்கம் தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த அரிவாளை எடுத்தார். பின்னர் அவர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த மகாலிங்கத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. 
இது குறித்து சுமதி கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவுசுடரை கைது செய்தனர். 
மனநிலை பாதிக்கப்பட்ட மகனே தந்தையை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story