வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் 10 சிலந்தி பூச்சிகள், ரூ.10 லட்சம் போதை மாத்திரைகள் கடத்தல்


வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் 10 சிலந்தி பூச்சிகள், ரூ.10 லட்சம் போதை மாத்திரைகள் கடத்தல்
x
தினத்தந்தி 16 Sep 2021 11:41 PM GMT (Updated: 16 Sep 2021 11:41 PM GMT)

போலந்து, அமெரிக்கா, நெதா்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் கடத்திய 10 சிலந்தி பூச்சிகள், ரூ.10 லட்சம் போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்கக தபால் பிரிவுக்கு வெளிநாடுகளில் இருந்து போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சரக்கக தபால் பிரிவுக்கு சரக்கு விமானத்தில் வந்த பார்சல்களை ஆய்வு செய்தனர்.

அப்போது போலந்து நாட்டில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு வந்த பார்சலை ஆய்வு செய்தனர். அதில் பிளாஸ்டிக் குப்பிகளில் 10 சிலந்தி பூச்சிகள் இருந்தன. மத்திய வன ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது, அவை கொடிய வகை சிலந்திகள் என தெரியவந்தது. இதையடுத்து சிலந்தி பூச்சி பார்சலை மீண்டும் போலந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டனர்.

அதேபோல் அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து சென்னை முகவரிக்கு 8 தபால்கள் வந்தன. அமெரிக்காவில் இருந்து மருத்துவ பொருட்கள் என்ற பெயரில் வந்த 3 பார்சல்களை திறந்து பார்த்த போது அதில் பதப்படுத்தப்பட்ட உயா் ரக கஞ்சா 274 கிராம் இருந்ததை கண்டுபிடித்தனா். நெதா்லாந்து நாட்டில் இருந்து வந்த 5 பாா்சல்களில் உயா்ரக போதை மாத்திரைகள் இருந்தன. 92 கிராம் எடைகொண்ட போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த பாா்சல்களில் இருந்த முகவரிகள் போலியானது என்பதும் தெரியவந்தது.

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் சிலந்தி பூச்சிகள், கஞ்சா, போதை மாத்திரைகள் கடத்தி வந்தது தொடர்பாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, இதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story