விவசாயிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை


விவசாயிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 17 Sep 2021 8:12 PM GMT (Updated: 17 Sep 2021 8:12 PM GMT)

பெண்ணை சாதி பெயரை சொல்லி திட்டிய வழக்கில் விவசாயிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெரம்பலூர்:

சாதி பெயரை சொல்லி... 
பெரம்பலூர் அருகே நெடுவாசல் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). விவசாயியான இவர், கடந்த 10.11.2013 அன்று முன்விரோதம் காரணமாக திருமணமான பெண் ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி, தவறாக நடக்க முயன்றதாகவும், பின்னர் அந்த பெண்ணை சாதி பெயரை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மருவத்தூர் போலீசார், தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை பெரம்பலூர் மாவட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
ஒரு ஆண்டு சிறை
இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி மலர்விழி நேற்று தீர்ப்பு கூறினார். இதில் சிவக்குமாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story