பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 18 Sep 2021 7:51 PM GMT (Updated: 18 Sep 2021 7:51 PM GMT)

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நெல்லையில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நெல்லை:

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நெல்லையில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. 

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களுக்கு சென்று பக்தர்கள் வழிபடுவது வழக்கம். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதற்கு பக்தர்களை அனுமதிக்கவில்லை. இதனால் பெருமாள் கோவில்களின் முன்பாக நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, நெல்லை அருகே மேலதிருவேங்கடநாதபுரத்தில் உள்ள தென் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் அதிகாலையில் பெருமாளுக்கு திருமஞ்சனமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இரவில் கருடசேவை நடைபெறவில்லை. எனினும் கருடன் மீது பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. கோவிலின் வெளியே நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
நெல்லை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் பெருமாள் புஷ்ப அங்கி அலங்காரத்தில் காட்சி கொடுத்தார் இரவில் கருடன் மீது எழுந்தருளினார்.

எட்டெழுத்து பெருமாள் கோவில்

இதேபோல் நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் அதிகாலையில் எட்டெழுத்து பெருமாள், ஆதிசிவன், சிவசுப்பிரமணியர், பெரியபிராட்டி அம்மன், இளையபெருமாள், ஆத்தியப்பர், ஆஞ்சநேயர், விநாயகர், முருகன், மாயாண்டி சித்தருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எட்டெழுத்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கொரோனா ஊரடங்கால் பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்காததால், வெளியே நின்று வழிபட்டனர்.

இதேபோன்று பாளையங்கோட்டை வேதநாராயணன், அழகியமன்னார் ராஜகோபால சுவாமி கோவில், நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில், சீவலப்பேரி அழகர் கோவில், சேரன்மாதேவி அப்பன் வெங்கடாசலபதி கோவில், நெல்லை கொக்கிரகுளம் நவநீத கிருஷ்ண சுவாமி கோவில் ஆகியவற்றிலும் பக்தர்கள் பங்கேற்பின்றி சிறப்பு வழிபாடு நடந்தது.


திருமலைநம்பி கோவிலில் கருட சேவை ரத்து

திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கருட சேவை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசின் உத்தரவையடுத்து இந்தாண்டு புரட்டாசி மாத 5 சனிக்கிழமைகளிலும் கருட சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவிலுக்கு செல்லவும் தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவில் சாலையில் போலீசார் 3 இடங்களில் தடுப்பு ஏற்படுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயிலுக்கு வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். 


Next Story