ஆடுகளை நாய் கடித்ததால் தகராறு; தொழிலாளி அடித்துக் கொலை


ஆடுகளை நாய் கடித்ததால் தகராறு; தொழிலாளி அடித்துக் கொலை
x
தினத்தந்தி 18 Sep 2021 8:15 PM GMT (Updated: 18 Sep 2021 8:15 PM GMT)

நெல்லை அருகே ஆடுகளை நாய் கடித்து கொன்றதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மானூர்:
நெல்லை அருகே ஆடுகளை நாய் கடித்து கொன்றதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆடுகளை நாய் கடித்தது

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கண்டியபேரி&புதுக்காலனியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் நாய் வளர்த்து வந்தார். இவரது நாய் அக்கம்பக்கத்தினர் வளர்த்து வந்த ஆடுகளை கடித்ததாகவும், இதில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கடந்த 13&ந் தேதி மாரியப்பனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்தனர்.

அடித்துக் கொலை

தகராறு முற்றவே மாரியப்பனை அவர்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

4 பேர் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்டியபேரியைச் சேர்ந்த முத்து (55), ராமையன்பட்டியைச் சேர்ந்த முத்துமணி (20) மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் என 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

நெல்லை அருகே ஆடுகளை நாய் கடித்ததால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story