போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு
விக்கிரமசிங்கபுரத்தில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரத்தில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
நூற்பாலை தொழிலாளி
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அடைய கருங்குளம் நடுதெருவைச் சேர்ந்தவர் நாராயண பெருமாள். இவருடைய மகன் லோகநாதன் (வயது 33). நூற்பாலை தொழிலாளி. இவருடைய தங்கை, அடைய கருங்குளம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்.
இதற்கு அவருடைய உறவினரான தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து, லோகநாதனின் தங்கையை மிரட்டியதாக கூறப்படுகிறது.
தீக்குளிக்க முயற்சி
இந்த நிலையில் நேற்று மதியம் லோகநாதன் தன்னுடைய மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது அவர், தன்னுடைய தங்கையை மிரட்டிய வக்கீலுக்கு உடந்தையாக போலீசார் செயல்படுவதாகவும், வக்கீல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திடீரென்று தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
உடனே லோகநாதனிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்த போலீசார், அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story