சேலம் மாவட்டத்தில் 3.24 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம்-இன்று முதல் 4-ந் தேதி வரை சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு


சேலம் மாவட்டத்தில் 3.24 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம்-இன்று முதல் 4-ந் தேதி வரை சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 19 Sep 2021 10:27 PM GMT (Updated: 19 Sep 2021 10:27 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 3.24 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’திரவம் வழங்குவதற்கு இன்று முதல் 4-ந் தேதி வரை சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 3.24 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’திரவம் வழங்குவதற்கு இன்று முதல் 4-ந் தேதி வரை சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நோய் எதிர்ப்பு சக்தி
மனித உடலுக்கு இன்றியமையாத ஒரு ஊட்டச்சத்தாக வைட்டமின் ‘ஏ’என்ற உயிர்ச்சத்து உள்ளது. இது ஆரோக்கியமான கண் பார்வைக்கு முக்கிய பங்களிக்கிறது. இது மட்டுமல்லாமல் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கும், தோல், திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்தாகும். இந்த உயிர்ச்சத்து பெரும்பாலான மஞ்சள் நிற கனிகளான மாம்பழம், பப்பாளி, கேரட், தக்காளி, பச்சைக்கீரை வகைகள் மற்றும் பால், மாமிச உணவுகளான மீன் மற்றும் முட்டையில் அதிகமாக கணப்படும். 
இச்சத்து குறைபாட்டினால் வறண்ட விழித்திரை, விழிவெண் திரையில் முக்கோண வடிவத்தில் வெண்ணிறமாக தடித்தல், மற்றும் மாலைக்கண் நோய் போன்றவைகள் ஏற்படும். இவற்றிற்கு தக்க சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் பார்வை இழக்க நேரிடும். இதனை கருத்தில் கொண்டு தேசிய அளவில் ஆண்டுதோறும் ஒரு முறை வைட்டமின் ‘ஏ’திரவம் நாடுமுழுவதும் உள்ள 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 
திரவம் வழங்கும் முகாம்
அதன்படி இந்தாண்டு சேலம் மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 4-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வைட்டமின் ‘ஏ’திரவம் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’திரவம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இந்த முகாம்களில் பொது சுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் துறைகளை சேர்ந்த 3,118 பணியாளர்கள் இணைந்து பணியாற்ற உள்ளார்கள். இந்த முகாமை பார்வையிட 459 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முகாமின் மூலம் சேலம் மாவட்டத்தில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 174 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’திரவத்தினை அளித்து கண் பார்வை குறைபாடில்லாத இளைய சமுதாயத்தினரை உருவாக்கிட ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story