திருச்சியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை


திருச்சியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Sep 2021 7:53 PM GMT (Updated: 20 Sep 2021 7:53 PM GMT)

திருச்சியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கே.கே.நகர், செப்.21&
திருச்சியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெண் டாக்டர்
திருச்சி சுப்பிரமணியபுரம் ஏரிக்கரை ரோடு பன்னீர் செல்வம் தெருவை சேர்ந்தவர் கோகுல் (வயது 37). டாக்டரான இவர் தொட்டியத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மனைவி சஞ்ஜினி (30). மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல டாக்டரான இவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. 1Ñ வயதில் மகன் உள்ளான்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன்&மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியே வசித்து வந்தனர். கோகுல் தொட்டியத்தில் வசித்து வருகிறார். சஞ்ஜினி மகனுடன் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது தாத்தாவான பிரபல டாக்டர் கோவிந்தராஜ் (81) என்பவருடன் வசித்து வந்தார். அதுமட்டுமின்றி சஞ்சினி திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் தனியாக மருத்துவமனையும் நடத்தி வந்தார்.
காதுகுத்து விழா
இந்த நிலையில் சஞ்ஜினி தனது மகனுக்கு திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் காதுகுத்து விழா நடத்தினார். இதில் அவரது உறவினர்கள் மட்டுமின்றி, நண்பர்கள், தோழிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர். கணவர் மட்டும் பங்கேற்கவில்லை. அப்போது, விழாவிற்கு வந்த சிலர் சஞ்ஜினியிடம் குழந்தையின் தந்தை எங்கே? என கேட்டனர். இது அவருக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
இதனையடுத்து விழா முடிந்ததும் சஞ்சினி குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் குழந்தையை தாத்தா கோவிந்தராஜிடம் கொடுத்து விட்டு படுக்கை அறைக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று காலையில் சஞ்ஜினியின் அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது
தற்கொலை
இதனால் சந்தேகம் அடைந்த கோவிந்தராஜ் அறைக்கதவை தட்டினார். ஆனால் திறக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது, அவர் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டாக்டர் சஞ்ஜினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  முதல் கட்ட விசாரணையில், மகனின் காதுகுத்துவிழாவின்போது கணவரை பற்றி சிலர் கேட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story