கொளத்தூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


கொளத்தூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 21 Sep 2021 12:32 AM GMT (Updated: 21 Sep 2021 12:32 AM GMT)

சென்னை கொளத்தூர் தொகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மாதவரம் நெடுஞ்சாலை, செயின்ட் மேரிஸ் பள்ளிக்கு அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் பல்லவன் சாலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.24 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடையையும் திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப்பொருட்களை வழங்கி, மரக்கன்று நட்டு வைத்தார்.

விளையாட்டு திடல்

மேலும் அவர், சீனிவாசா நகர் 3-வது குறுக்குத்தெருவில் ரூ.28 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி சிறுவர் விளையாட்டுத்திடல் மற்றும் பூங்காவை திறந்து வைத்து, சிறுவர், சிறுமியர்களுடன் உரையாடினார்.

பெரியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘அனிதா அச்சீவர்ஸ்’ அகாடமியில் டேலி பயின்ற 157 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, தொகுதி மக்களுக்கு மருத்துவ உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாவு அரவை எந்திரங்கள், இஸ்திரி பெட்டிகள், தள்ளுவண்டிகள், மீன்பாடி வண்டிகள் என மொத்தம் 167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி, தாயகம் கவி எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஏ.சண்முகசுந்தரம், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) எம்.அருணா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story