புதுக்கோட்டை பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான பள்ளி ஆசிரியர் சிறையில் அடைப்பு 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு


புதுக்கோட்டை பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான பள்ளி ஆசிரியர் சிறையில் அடைப்பு 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு
x
தினத்தந்தி 23 Sep 2021 6:27 PM GMT (Updated: 23 Sep 2021 6:27 PM GMT)

கைதான பள்ளி ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மருப்பினி ரோட்டில் எஸ்.எப்.எஸ். மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவிக்கு அந்த வகுப்பின் கணிதம் மற்றும் வணிகவியல் ஆசிரியர் சண்முகநாதன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர், பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். அதை தொடர்ந்து ஆசிரியர் சண்முகநாதனை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தரப்பில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் குழந்தைகள் பாதுகாப்பு பரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 
குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சட்ட ஆலோசகர் சசி கொடுத்த புகாரின் பேரில், டவுன் அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியர் சண்முகநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து விசாரணைக்கு பின் நேற்று அவர் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டிற்கு கொண்டுவரப்பட்டு நீதிபதி டாக்டர்.சத்யா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பின் நீதிபதி, சண்முகநாதனை வருகிற அக்டோபர் 7-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து அவர் திருமயம் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் ஆசிரியர் சண்முகநாதன் மாணவியிடம் ஆபாசமாகவும், பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பேசிய ஆடியோ சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story