மனைவியை குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை


மனைவியை குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 24 Sep 2021 3:59 AM GMT (Updated: 24 Sep 2021 3:59 AM GMT)

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குடும்ப தகராறில் மனைவியை குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பணன் மகன் முத்துக்குமார் (வயது26).இவரின் மனைவி ராணி என்ற அமுதராணி (24). முத்துக்குமார் மீது திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் அடிக்கடி சிறைக்கு சென்று வந்துள்ளார்.இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதன் காரணமாக கணவனை விட்டு அமுதராணி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.இந்நிலையில் இனி திருந்தி வாழ்வதாக கூறி மனைவியை குடும்பம் நடத்த அழைத்து வந்துள்ளார். வந்த பின்னரும் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி முத்துக்குமார் மனைவியை சைக்கிளில் சந்தைக்கு அழைத்து சென்றுள்ளார்.
செல்லும் வழியில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த முத்துக்குமார் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி அமுதராணியை கொலை செய்தார். இதுதொடர்பாக அமுதராணியின் தந்தை பூமிநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் கமுதி போலீசார் வழக்குபதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் விரைவு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.வழக்கினை விசாரித்த நீதிபதி சுபத்ரா மனைவியை கொலை செய்த முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story