மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக்கொன்றது அம்பலம்


மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக்கொன்றது அம்பலம்
x
தினத்தந்தி 24 Sep 2021 5:37 PM GMT (Updated: 24 Sep 2021 5:37 PM GMT)

சீர்காழி அருகே மீனவர் மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பமாக அவர் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக்கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

சீர்காழி;
சீர்காழி அருகே மீனவர் மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பமாக அவர் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக்கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள். 
மீனவர் சாவு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமம் அன்னை தெரசா வீதியை சேர்ந்தவர் பரசுராமன். இவருடைய மகன் முருகன்(வயது 26). மீனவரான இவர், கடந்த 5 தேதி தொடுவாய் மாரியம்மன் கோவில் எதிரே பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
அப்போது முருகன் சாவில் மர்மம் உள்ளதாக அவரது பெற்றோர் கூறினர். இதைத்தொடர்ந்து சீர்காழி போலீசார் முருகன் மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது. 
இதன் விவரம் வருமாறு:
அடித்துக்கொலை
கடந்த 4ந் தேதி இரவு முருகன் தொடுவாய் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மதியழகன் என்பவரின் வீட்டுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதியழகன் மகன் கவியரசன்(வயது21), அதே பகுதியை சேர்ந்த வெள்ளிரிசன்(44), மதுரை வீரன்(37), மதியழகன் மனைவி அஞ்சம்மாள்(45), அடைக்கலம் மகன் ரவிச்சந்திரன் மற்றும் ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் செல்வம், செல்வநாதன் ஆகியோர் சேர்ந்து முருகனை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். 
பின்னர் கோவில் அருகில் உள்ள ஒரு மின் கம்பத்தில் கட்டி வைத்து இரவு முழுவதும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த முருகன் 5ந் தேதி அதிகாலை உயிரிழந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. 
பெண் உள்பட 4 பேர் கைது
இதைத்தொடர்ந்து சீர்காழி போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி கவியரசன், வெள்ளிரிசன், மதுரைவீரன், அஞ்சம்மாள், ஆகிய 4 பேரையும் கைது செய்து சீர்காழி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தொடுவாய் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், செல்வம், செல்வநாதன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர். 
மீனவர் மர்மமான முறையில் இறந்த வழக்கில் அவர் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக்கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது தொடுவாய் மீனவ கிராம பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story