3 வயது பெண் குழந்தை மூச்சுத்திணறி சாவு சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்


3 வயது பெண் குழந்தை மூச்சுத்திணறி சாவு சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்
x
தினத்தந்தி 27 Sep 2021 10:55 AM GMT (Updated: 27 Sep 2021 10:55 AM GMT)

திருவொற்றியூரில் 3 வயது பெண் குழந்தை திடீரென மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தது. தனது குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.

திருவொற்றியூர்,

மீஞ்சூரை சேர்ந்தவர் விக்னேஷ். மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவருடைய மனைவி காமாட்சி. இவர்களுக்கு 3 வயதில் பிரியதர்ஷினி என்ற பெண் குழந்தை இருந்தது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காமாட்சி, கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது குழந்தையுடன் திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் உள்ள தந்தை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் குழந்தை பிரியதர்ஷினிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு துடித்துக்கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காமாட்சி மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், குழந்தை பிரியதர்ஷினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். குழந்தையின் உடலை பார்த்து காமாட்சியும், அவரது உறவினர்களும் கதறி அழுதனர்.

சாவில் சந்தேகம்

இந்த சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் குழந்தையின் தந்தை விக்னேஷ், தனது குழந்தையின் சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் புகார் கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் குழந்தையின் தாய் காமாட்சியிடம் விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு ஆம்பலேட் மற்றும் குளிர்பானம் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குழந்தை உயிரிழந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story