ஏரிக்கரையோரம் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார்


ஏரிக்கரையோரம் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார்
x
தினத்தந்தி 27 Sep 2021 1:26 PM GMT (Updated: 27 Sep 2021 1:26 PM GMT)

மப்பேடு அருகே ஏரிக்கரையோரம் இருந்த முட்செடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள நரசமங்கலம் காலனி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 21). இவர் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதியன்று வேலைக்குச் சென்ற ஜெயஸ்ரீ மீண்டும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே நேற்று முன்தினம் நரசமங்கலம் பகுதியிலுள்ள ஏரிக்கரையில் பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக ஜெயஸ்ரீயின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். அப்போது அங்கு அவர்கள் சென்று பார்த்த போது அங்குள்ள முட்செடியில் துப்பட்டாவால் ஜெயஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.

போலீசார் விசாரணை

அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஜெயஸ்ரீயின் உடலை கண்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜெயஸ்ரீ அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக இறந்த ஜெயஸ்ரீயின் தாயார் ரேவதி மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து ஜெயஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து காதல் விவகாரத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என மப்பேடு போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Next Story