காய்கறி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகள் திருட்டு


காய்கறி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 3 Oct 2021 7:47 PM GMT (Updated: 3 Oct 2021 7:47 PM GMT)

புதுக்கோட்டையில் காய்கறி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் 31 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுக்கோட்டை, 
காய்கறி வியாபாரி
புதுக்கோட்டை மாப்பிள்ளையார் குளம் 2-வது வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி பார்வதி (வயது 51). காய்கறி வியாபாரியான ராஜேந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்தநிலையில், பார்வதியின் மகன் ராம்குமாரின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்ப்பதற்காக கடந்த 1-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு அருப்புக்கோட்டைக்கு தனது மகனுடன் பார்வதி சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினரான லட்சுமி கண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பார்வதிக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார்.
31 பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் உள்ளே சென்று அவர் பார்த்தபோது உள் கதவு உடைக்கப்பட்டு, மற்றொரு அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டும், அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 31 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து பார்வதி கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story