2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 970 வாக்குச்சாவடிகள் - கலெக்டர் தகவல்


2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 970 வாக்குச்சாவடிகள் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 Oct 2021 6:43 AM GMT (Updated: 8 Oct 2021 6:43 AM GMT)

2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் 970 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவி்த்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை கடந்த மாதம் 13-ந்தேதி வெளியிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து அச்சரப்பாக்கம், மதுராந்தகம், காட்டாங்கொளத்தூர், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு நாளை (சனிக்கிழமை) 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 80 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 199 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 1,449 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.

அச்சரப்பாக்கத்தில் 204 வாக்குச்சாவடிகளும், மதுராந்தகத்தில் 232 வாக்குச்சாவடிகளும், காட்டாங்கொளத்தூரில் 368 வாக்குச்சாவடிகளும், சித்தாமூரில் 166 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 970 வாக்குச்சாவடிகளில் 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 80 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளும் வீடியோ பதிவு செய்யப்படவுள்ளது. வாக்குச்சாவடிகளில் வெப் ஸ்ட்ரிமிங் கேமராக்கள் மூலமாகவும், வீடியோ கேமராக்கள் மூலமாகவும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும், வாக்குப்பதிவு நாளான்று வாக்குப்பதிவு நிகழ்வுகள் பதிவு செய்யப்படவுள்ளது.

மேலும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் கொரோனா நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்றப்பட வேண்டும். வேட்பாளர் அவர்தம் முகவர் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் எவரும் செல்போன் பயன்படுத்திட அனுமதி இல்லை. வாக்காளர்கள் யாரும் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துவர அனுமதி இல்லை. வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு மட்டும் வாக்கு சதவீத விவரங்களை வழங்கும் பொருட்டு செல்போன் பயன்படுத்திட அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story