ரூ.18 லட்சம் மோசடி; டாக்டர் கைது


ரூ.18 லட்சம் மோசடி; டாக்டர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2021 8:18 PM GMT (Updated: 9 Oct 2021 8:18 PM GMT)

மருத்துவமனையில் கேண்டீன் அமைத்து தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி, அக். 10-
மருத்துவமனையில் கேண்டீன் அமைத்து தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.
புதிய மருத்துவமனை
திருச்சி அன்பில் நகர் ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் டாக்டர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பஞ்சப்பூர் பகுதியில் வெல்கர் இன்டர்நேஷனல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற புதிய மருத்துவமனை கட்டி வந்தார். இங்கு கேண்டீன் நடத்துவதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் பகுதியை சேர்ந்த முகமது சபீர் என்பவர் ராஜேந்திரனிடம் ரூ.18 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் சில மாதங்களிலேயே ராஜேந்திரன் மருத்துவமனை கட்டுமான பணியை பாதியிலேயே நிறுத்தியதாக தெரிகிறது.
கமிஷனரிடம் புகார்
இதை அறிந்த முகமது சபீர் தான் கொடுத்த ரூ.18 லட்சத்தை திரும்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் ராஜேந்திரன் பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தாராம். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.  இது தொடர்பாக முகமது சபீர் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார்.
இந்த மனுவை விசாரித்த கமிஷனர் விரைந்து நடவடிக்கை எடுக்கும் படி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story