வீடுதேடிச்சென்று தடுப்பூசி செலுத்த வாகனம்


வீடுதேடிச்சென்று தடுப்பூசி செலுத்த வாகனம்
x
தினத்தந்தி 10 Oct 2021 8:59 PM GMT (Updated: 10 Oct 2021 9:41 PM GMT)

வீடுதேடிச்சென்று தடுப்பூசி செலுத்த வாகனம்

சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் நடமாடும் வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
சிறப்பு முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் 5-வது கட்ட தடுப்பூசிபோடும் முகாம் நேற்று நடைபெற்றது. சிவகங்கை பஸ்நிலையம் அருகில் நகராட்சி சார்பில் நடைபெற்ற முகாமை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க, 5-ம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.சிவகங்கை மாவட்டத்தில் 750 முகாம்களில் தடுப்பூசிபோடும் பணி நடைபெறுகிறது. 71,260 பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் தடுப்பூசி  கையிருப்பில் உள்ளது. 
மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 70 ஆயிரமாகும். இதில் 8,70,967 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 100 சதவீதம் தடுப்பூசிபோட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தெருக்களில் கடைகள் வைத்திருப்பவர்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரி பவர்கள ்அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளார்களா என்று நகராட்சி அதிகாரிகள் சென்று விசாரித்து தடுப்பூசி போட்டுள்ளதை உறுதி செய்வார்கள். 
மேலும் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கட்டாயம் தடுப்பூசிபோட வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிவகங்கை, காரைக்குடி, தேவ கோட்டை ஆகிய 3 நகராட்சி பகுதிகளிலும், திருப்பத்தூர், சிங்கம்புணரி, இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய 5 பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு நடமாடும் வாகனம் மூலம் மருத்துவக்குழுவினர் மாவட்டத்தில் 100 நடமாடும் வாகனம் மூலம் இந்த பணி மேற்கொள்ளப் படுகின்றன. 
9 வாகனங்கள்
சிவகங்கை நகரில் 9 வாகனங்களில் சென்று தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர், சிவகங்கை நகரில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் நடமாடும் வாகனத்தை கலெக்டர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் இளங்கோ மகேசுவரன், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராம்கணேஷ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜேசுவரன், நகர் நல மைய டாக்டர் கலாவதி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story