தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 Oct 2021 10:04 PM GMT (Updated: 10 Oct 2021 10:04 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மூடப்படாத குடிநீர் குழாய் பள்ளம் 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா ஆரியூர் ஊராட்சி ஆமப்பாறையில் இருந்து சர்க்கரை ஆலை வண்டி கேட் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. அப்படி தோண்டப்பட்ட குழி பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. சாலையை ஒட்டியவாறு குழி இருப்பதால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி குழிக்குள் விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த குழியால் விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் முன் அந்த குழியில் குழாய் பதித்து அதனை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்மக்கள்,  நாமக்கல்.

குப்பைதொட்டி வேண்டும்

சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டி பகுதியில் அரசு பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த வழியாகத்தான் ஊருக்குள் செல்லவேண்டும். அந்த பகுதி முழுவதும் குப்பை குவியலாகவே கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அந்த வழியை கடந்து செல்லவே சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை அள்ளவும், அந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மு.கோபிநாத், நஞ்சம்பட்டி, சேலம்.

கிருஷ்ணகிரி புதுபேட்டை நவநீத வேணுகோபாலசாமி கோவில் அமைந்துள்ள பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந்த குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் குப்பை தொட்டிகள் வைப்பதுடன், குப்பைகளை அள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்துரு, கிருஷ்ணகிரி.

சேலம் மாவட்டம் தளவாய்பட்டி ஊராட்சி அரசு பள்ளி செல்லும் சாலையில் குப்பைகளை கொட்டுவதால் மிகவும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக பொதுமக்கள் இங்கே குப்பைகள் கொட்டப்படுவதால் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது. எனவே இங்கு குப்பை கொட்டப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்கு குப்பை தொட்டிகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோ.வெங்கடேஸ்வரன், கொல்லப்பட்டி, சேலம்.

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தாரமங்கலம் சங்ககிரி மெயின் ரோடு , 7-வது வார்டில் மாணவர் விடுதி முன்பு உள்ள இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. சரியான பராமரிப்பு இல்லாததாலும் குப்பை தொட்டி இல்லாததாலும் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் எளிதில் நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் அந்த பகுதியில் பன்றிகளும் உலாவி ரோட்டில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் அந்த பகுதியில் குப்பை தொட்டிகள் வைத்து அதனை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மு.இந்தர்ஜித், சங்ககிரி, சேலம்.

மின்விளக்கு எரியவில்லை

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பாக உள்ள சாலையில் தெருவிளக்குகள் சரிவர எரிவது இல்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதற்கும், சாலையை கடப்பதற்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வி.அர்ஜூன், இலக்கியம்பட்டி, தர்மபுரி.

இரவு நேர பஸ்கள் 

தர்மபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் தடங்கம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு அமைந்துள்ள கோர்ட்டுகளுக்கு பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் சென்றுவர காலை முதல் இரவு வரை தர்மபுரி டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த டவுன் பஸ்கள் மூலம் தேக்கம்பட்டி, வெண்ணாம்பட்டி, தடங்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் பயன் பெற்று வருகிறார்கள். கோர்ட்டுகளுக்கு வந்து செல்லும் பொதுமக்களின் நலன் கருதி வேலை நாட்களில் இரவில் கூடுதல் நேரம் வரை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் இருந்து டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், தர்மபுரி.


நாமக்கல் ராமாபுரம் புதூர் மெயின்ரோடு பாவடி தெருவில் சாலை நடுவே சாக்கடை கால்வாய் மூடி இல்லாததால் அபாயகரமான குழியாக மாறி உள்ளது. இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இந்த குழியால் விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த குழியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தமிழ்செல்வன், நாமக்கல்.

குடிநீர் பிரச்சினை

சேலம் பெரமனூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உள்ளது. இங்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 4 குடிநீர் குழாய்கள் இருந்தன. சாலை பராமரிப்பு பணிக்காக குழி தோண்டிய போது குடிநீர் குழாய்களுக்கு செல்லும் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் அந்த பணிகள் முடிந்து ஒரு குடிநீர் குழாயில் மட்டும் தண்ணீர்  வருகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே மீண்டும் மற்ற குடிநீர் குழாய்களில் தண்ணீர் வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜியா, பெரமனூர், சேலம்.

Next Story