கூத்தாநல்லூர் பகுதியில் தொடர் மழையால் நெற்கதிர்கள் சாய்ந்தன விவசாயிகள் கவலை


கூத்தாநல்லூர் பகுதியில் தொடர் மழையால் நெற்கதிர்கள் சாய்ந்தன விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 11 Oct 2021 5:51 PM GMT (Updated: 11 Oct 2021 5:51 PM GMT)

கூத்தாநல்லூர் பகுதியில் தொடர் மழையால் நெற்கதிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

கூத்தாநல்லூர்:-

கூத்தாநல்லூர் பகுதியில் தொடர் மழையால் நெற்கதிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தொடர் மழை

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை பயன்படுத்தி திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.
தற்போது பயிர்கள் வளர்ந்து நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில், கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

விவசாயிகள் கவலை

நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. அப்போது, காற்றின் வேகமும் சற்று அதிகமாக இருந்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழையால் கூத்தாநல்லூர் பகுதிகளில் அறுவடைக்கு தயாராகி வந்த குறுவை நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்து விட்டன. வயலில் தேங்கி உள்ள தண்ணீரில் நெற்கதிர்கள் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் தார்ப்பாயால் மூடி பாதுகாத்து வருகின்றனர். நேற்றும் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக அறுவடை பணிகள் தாமதமாகும் என்றும், வயல்களில் நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி பாதிப்பு ஏற்படும் என்றும் விவசாயிகள் கூறினர்.

பெரும் நஷ்டம்

நெற்கதிர்கள் பல இடங்களில் வயலில் தேங்கி உள்ள தண்ணீரில் சாய்ந்து கிடப்பதால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் கூத்தாநல்லூர் பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Next Story