நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2021 6:02 PM GMT (Updated: 11 Oct 2021 6:02 PM GMT)

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலைகலெக்டர் அலுவலகம் முன்பு சிறு விடுப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் செல்வகுமார், துணைத் தலைவர் அன்பரசன், ஆரணி வட்டத் தலைவர் தனசேகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

ஆர்ப்பாட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் பணி செய்து வருவதால் பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை பதிவுக்கு பதிலாக கண் விழித்திரை மூலமாக விற்பனை செய்யும் முறையை ஆவன செய்ய வேண்டும். 

கூட்டுறவுத் துறையின் கீழ் பணிபுரியும் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியாளர் சிக்கன நாணய கடன் சங்க நிதியை அவரவர் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில், தரமானதாக, பொட்டலமாக வழங்க வேண்டும்.

பணியாளர் அனைவருக்கும் முதல் தேதியில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story