பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை


பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 11 Oct 2021 7:52 PM GMT (Updated: 11 Oct 2021 7:52 PM GMT)

வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி, அக்.12-
வெவ்வேறு  சம்பவங்களில் 2 பெண்கள் உள்பட 3பேர்் தற்கொலை செய்து கொண்டனர்.
மாடியில் இருந்து குதித்து...
திருச்சி திருவானைக்காவல் அகிலா நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் அங்குள்ள வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ரங்கசாமியின் 3-வது மகள் கிருஷ்ணவேணி (வயது28). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற கிருஷ்ணவேணி திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் தின்று...
பொன்னமராவதி வேந்தம்பட்டியை சேர்ந்தவர்  முகமது இலியாஸ் (34). இவருக்கும் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ரபியத்துல் பசரியா (27) என்பவருக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ரபியத்துல் பசரியாவுக்கு அடிக்கடி வயிற்று வலிஏற்பட்டு வந்தது. இதனால் முகமது இலியாஸ்  விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இதனிடையே கடந்த 2½ ஆண்டுகளாக ரபியத்துல் பசரியா திருவெறும்பூர் அருகே குண்டூர் மொராய்சிட்டியில் உள்ள சகோதரி வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் ரபியத்துல் பசரியாவுக்கு 2-வது திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் கடந்த 8-ந்தேதி வீட்டில் விஷம் தின்று மயங்கி கிடந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த அவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து நவல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோமரசம்பேட்டை
சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை குடிதெருவை சேர்ந்தவர் சந்தனகுமார் (38). விவசாய கூலி தொழிலாளியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற இடத்தில் தடுமாறி கீழே விழுந்ததில் முதுகின் தசை கிழிந்தது. சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையிலும் வலி இருந்து கொண்டே இருந்தது. இதனால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து வயலில் மயங்கி கிடந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து சோமரசம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story