காரில் வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை


காரில் வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 11 Oct 2021 8:17 PM GMT (Updated: 11 Oct 2021 8:17 PM GMT)

தஞ்சை அருகே பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி காரில் வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மெக்கானிக்கை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

வல்லம்:
தஞ்சை அருகே பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி காரில் வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மெக்கானிக்கை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். 
மாணவி 
தஞ்சையை அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் பஸ்சில் தஞ்சைக்கு வந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கு செல்லும் நேரத்தில் வரும் பஸ்சை தவற விட்டுள்ளார். உடனே மாணவியின் பெற்றோர் அவர்களது உறவுக்காரரான தஞ்சை கீழவஸ்தாசாவடியை சேர்ந்த கார் மெக்கானிக்கான அக்பர் அலி (38) என்பவர் மோட்டார் சைக்கிளில் மாணவியை பள்ளி சென்று விடுமாறு கூறி அனுப்பி உள்ளனர். 
பின்னர் அக்பர்அலி தனது மோட்டார் சைக்கிளில் மாணவியை அழைத்து கொண்டு தஞ்சை நோக்கி வந்துள்ளார். அப்போது ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளை  அக்பர்அலி நிறுத்தி, மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து விட்டதாக மாணவியிடம் கூறினார். 
பாலியல் தொல்லை 
அதனை தொடர்ந்து காரில் மாணவியை ஏற்றிக்கொண்டு அக்பர் அலி சென்றுள்ளார். அப்போது பள்ளிக்கு மாணவியை அழைத்து செல்லாமல் தஞ்சை புறநகர் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் காரில் வைத்தே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் மாணவியை மிரட்டி 7 மணி நேரம் காரிலேயே வைத்து உள்ளார். 
போக்சோவில் கைது 
இந்தநிலையில் மாலை வீடு திரும்பிய மாணவி நடந்த சம்பவங்களை அவரது  உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் உறவினர்கள் இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா உத்தரவின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு அக்பர் அலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story