பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 Oct 2021 8:42 PM GMT (Updated: 11 Oct 2021 8:42 PM GMT)

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர்:

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது மனு கொடுக்க வந்த விவசாயிகள் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் கூறுகையில், தமிழக அரசு உத்தரவின்படி மற்ற மாவட்டங்களில் வழங்கியதுபோல், பெரம்பலூர் மாவட்டத்திலும் விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயத்திற்காக வாங்கிய பயிர்க்கடன் மற்றும் 5 பவுன் அளவு நகைக்கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்ததற்கான சான்று வழங்கி, நகையையும் திருப்பி அளித்து, புதிய பயிர்க்கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் நிலவும் யூரியா உர தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரத்தை கூடுதல் விலைக்கு விற்கும் தனியார் உரக்கடைகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
முற்றுகை
இதேபோல் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு மத்திய-மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதிய அளவு நிலக்கரியை மத்திய அரசு வாங்கிக்கொடுக்க வேண்டும். உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளின் கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.150 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அரசு அறிவித்தது. அந்த தொகையை தீபாவளி பண்டிகைக்கு முன்பு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
வேப்பந்தட்டை தாலுகா தொண்டமாந்துறை பூஞ்சோலை பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தார் சாலை அமைத்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், தொண்டமாந்துறை ஜெ.ஜெ. நகர் முதல் பள்ளாங்குளம் பெரியசாமி கோவில் வழியாக விஜயபுரம் வரை செல்லும் சுமார் 5½ கிலோ மீட்டர் மண் பாதை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. மேலும் அந்த மண் பாதை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. அந்த வழியாக எங்கள் விவசாய நிலங்களுக்கு இடுபொருட்கள் கொண்டு செல்வதற்கும், உற்பத்தியான விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதற்கும் சிரமம் ஏற்படுகிறது. பால் கொள்முதல் செய்ய வேனும் வருவதில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ-மாணவிகள் இந்த மண் பாதையால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே கலெக்டர் போர்க்கால அடிப்படையில் மண் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தி புதிதாக தார் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் அவர்கள் இது தொடர்பாக மனுவை கலெக்டரிடம் வழங்கினர்.
பொதுப்பாதையில் கோவில் கட்ட முயற்சி
பொதுமக்கள் சார்பில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் முகம்மது இலியாஸ் அலி கலெக்டரிடம் கொடுத்த மனுவில், அரும்பாவூர் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். வேப்பந்தட்டை தாலுகா மங்களம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களில் சிலர் வந்து கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் பொது பாதையில் இடையூறாக தனியார் சிலர் சேர்ந்து அம்மன் கோவில் கட்ட முயற்சிக்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் இஸ்லாமிய கலாசார பேரவையின் மாவட்ட துணைச் செயலாளர் ஜஹாங்கீர் பாஷா கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் அமைப்பின் சார்பில், காந்தி பிறந்த நாள் முதல் வருகிற 12-ந்தேதி வரை போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். எனவே மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் ெதாடர்பாக மொத்தம் 231 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லலிதா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சரவணன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story