கொத்து கொத்தாய் இறந்து கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்


கொத்து கொத்தாய் இறந்து கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்
x
தினத்தந்தி 11 Oct 2021 10:06 PM GMT (Updated: 11 Oct 2021 10:06 PM GMT)

கீழக்கரை முதல் ஏர்வாடி வரை கொத்து கொத்தாய் இறந்து கடற்கரையில் நேற்று ஏராளமான மீன்கள் கரை ஒதுங்கி கிடந்தன. கடல்நீர் நிறம் மாறியது இதற்கு காரணமா? என ஆய்வு நடந்து வருகிறது.

கீழக்கரை
கீழக்கரை முதல் ஏர்வாடி வரை கொத்து கொத்தாய் இறந்து கடற்கரையில் நேற்று ஏராளமான மீன்கள் கரை ஒதுங்கி கிடந்தன. கடல்நீர் நிறம் மாறியது இதற்கு காரணமா? என ஆய்வு நடந்து வருகிறது.
பச்சைப்பாசிகள்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளை சுற்றிலும் டால்பின், கடல் பசு, கடல் குதிரை, ஆமை உள்ளிட்ட 3,600 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இதைத்தவிர கடலுக்குள் இயற்கையாகவே பல பாசிகளும் வளர்ந்து வருகின்றன.
அதுபோல் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரையிலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பூங்கோறை என்று சொல்லக்கூடிய ஒரு விதமான பச்சைப்பாசிகள் இனப்பெருக்கத்திற்காக கடல் நீரில் முழுமையாக படர்ந்து விடும். இந்த பச்சை பாசியால் கடல்நீர் பச்சை நிறமாக மாறிவிடும். 
தற்ேபாது கீழக்கரை, ஏர்வாடி கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாகவே பச்சை பாசிகள் படர்ந்துள்ளன.
இந்தநிலையில் கீழக்கரை முதல் ஏர்வாடி வரையிலான கடற்கரை பகுதியில் நேற்று ஏராளமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கி கிடந்தன. குறிப்பாக கீழக்கரை துறைமுக பாலம் அருகே உள்ள கடற்கரை பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓரா, நகரை, கிளி மீன், கணவாய், விளை மீன், நெத்திலி, அஞ்சாலை உள்ளிட்ட பல வகையான மீன்கள் கொத்து ெகாத்தாய் இறந்து கரை ஒதுங்கி கிடந்தன.
அதிகாரிகள் ஆய்வு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், கீழக்கரை தாசில்தார் முருகேசன், துணை தாசில்தார் பழனிகுமார், மீன்துறை உதவி இயக்குனர் ராஜதுரை உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது இறந்து கிடந்த மீன்கள் மற்றும் நிறம் மாறிய கடல் நீரை ஆய்வுக்காக சேகரித்து சென்றனர்.
கடற்கரை பகுதியில் கிடந்த மீன்களை ஏராளமானவர்கள் வந்து வேடிக்கை பார்த்தனர். மீன்கள் இறந்து கிடந்ததால் கீழக்கரை கடற்கரை பகுதியில் துர்நாற்றம் வீசியது. கீழக்கரை பகுதியில் நேற்று மீன் வியாபாரம் பாதிக்கப்பட்டதுடன் மீன் மார்க்கெட் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
காரணம் என்ன?
இதுபற்றி கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக பாம்பன் முதல் உச்சிப்புளி அருகே புதுமடம், கீழக்கரை முதல் ஏர்வாடி வரையிலான கடல் பகுதியில் பச்சை பாசிகள் படர்ந்து கடல் நீர் நிறம் மாறி காணப்பட்டது. இந்த பாசிகள் கரையோர கடல் பகுதியில் அதிக அளவில் படர்ந்திருந்த காரணத்தால் மீன்கள் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம்.
ஆண்டுதோறும் இந்த சீசனில் பச்சை பாசிகள் கடலில் படர்ந்து வருவது இயல்புதான். இதனால் மீனவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். மீன்களை நன்கு கழுவி சுத்தப்படுத்தி சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். பச்சைப்பாசிகள் கடலில் படர்ந்து வருவது குறித்து தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் தகவல்களை சேகரித்து அதன் பாதிப்பு குறித்த நிலவரங்களை கேட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இயல்புக்கு மாறிய பாம்பன் கடல்
 பாம்பன் கடல் பகுதியில் நேற்று முன்தினம் பச்சைப்பாசிகள் படர்ந்து பச்சை நிறமாக காட்சியளித்த கடலானது நேற்று இயல்பு நிலைக்கு திரும்பியது. பாம்பன் பகுதியில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story