ஊரக உள்ளாட்சி தேர்தல்:12 மையங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை-மாலைக்குள் முடிவுகள் வெளியாகும்


ஊரக உள்ளாட்சி தேர்தல்:12 மையங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை-மாலைக்குள் முடிவுகள் வெளியாகும்
x
தினத்தந்தி 11 Oct 2021 10:29 PM GMT (Updated: 11 Oct 2021 10:29 PM GMT)

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 24 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) 12 மையங்களில் எண்ணப்படுகின்றன. முடிவுகள் மாலைக்குள் வெளியாகும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 24 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) 12 மையங்களில் எண்ணப்படுகின்றன. முடிவுகள் மாலைக்குள் வெளியாகும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல்
சேலம் மாவட்டத்தில் ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் 10-வது வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உள்பட காலியாக உள்ள 24 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. 1 லட்சத்து 23 ஆயிரத்து 128 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. 195 வாக்குச்சாவடிகளில் நடந்த இந்த தேர்தலில் 79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதன்படி ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) 12 மையங்களில் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. 
மாவட்ட ஊராட்சி 10-வது வார்டு உறுப்பினர், ஓமலூர் ஒன்றியம் சிக்கனம்பட்டி, புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்கள், புளியம்பட்டி 3-வது வார்டு கோட்டமேட்டுப்பட்டி ஊராட்சி 5-வது வார்டு ஆகிய பதவிகள் என மொத்தம் 95 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள மையத்தில் இன்று எண்ணப்படுகின்றன.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
அங்கு வாக்குகள் எண்ண வசதியாக 7 மேசைகள் போடப்பட்டு உள்ளன. மேலும் வேட்பாளர்களின் முகவர்களுக்கும் மேசை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அங்கு மொத்தம் 14 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. 
அதே போன்று பனமரத்துப்பட்டி ஒன்றியம் 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கிறது. வாக்குகள் எண்ணப்படும் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 150 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று பயிற்சி வகுப்பு நடந்தது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 12 மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 
கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான முடிவுகள் ஒரு மணி நேரத்திற்குள் தெரிய வரும் என்றும், மற்ற பதவிகளுக்கான முடிவுகள் மாலைக்குள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story