சிகிச்சை அளிக்க சென்ற வீட்டில் நகையை திருடியதாக நர்சு மீது தாக்குதல்


சிகிச்சை அளிக்க சென்ற வீட்டில் நகையை திருடியதாக நர்சு மீது தாக்குதல்
x
தினத்தந்தி 12 Oct 2021 4:34 AM GMT (Updated: 12 Oct 2021 4:34 AM GMT)

சிகிச்சை அளிக்க சென்ற வீட்டில் நகையை திருடியதாக நர்சு மீது வீட்டின் உரிமையாளர், மருத்துவ மைய உரிமையாளரிடம் கூறினார்.

மயிலாடுதுறையை சேர்ந்தவர் ஜோதிகா (வயது 20). இவர், மருத்துவ படிப்பு முடித்து விட்டு சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள தனியார் மருத்துவ மையத்தில் நர்சாக வேலை செய்து வருகிறார். அதன் உரிமையாளர் கொடுக்கும் முகவரிக்கு சென்று அந்த வீட்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து அவர்களை பராமரித்து வருவதுதான் ஜோதிகாவின் வேலை.

அதன்படி கடந்த மாதம் தாம்பரத்தில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு சிகிச்சை அளிக்க சென்றார். அப்போது அந்த வீட்டில் இருந்த நகை மாயமானதாகவும், அதனை ஜோதிகா திருடிவிட்டதாகவும் அந்த வீட்டின் உரிமையாளர், மருத்துவ மைய உரிமையாளரிடம் கூறினார். இதனால் நகையை எடுத்தாயா? என கேட்டு ஜோதிகாவை அவர் அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் விரக்தியடைந்த ஜோதிகா சொந்த ஊருக்கு சென்றபோது மயங்கியதாகவும் தெரிகிறது. இதையடுத்து மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் ஜோதிகாவை அவரது பெற்றோர் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story