வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர் கலெக்டர் ஆய்வு


வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Oct 2021 6:31 PM GMT (Updated: 12 Oct 2021 6:31 PM GMT)

கோலியனூர், காணை ஒன்றிய வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர், கலெக்டர் ஆய்வு மேற்கொண்டனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்துக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காணை ஒன்றிய வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி ஆகிய வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை பணியை நேற்று காலை மாவட்ட தேர்தல் பார்வையாளர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட கலெக்டர் டி.மோகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகள் முழுவதும் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறதா என்றும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறதா என்று பார்வையிட்டனர்.

அறிவுரை

அப்போது வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களிடம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட கலெக்டர் டி.மோகன் ஆகியோர் கூறுகையில், சுற்று வாரியாக எண்ணப்படும் வாக்குகளை அதற்கென்று உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உரிய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும், வாக்கு எண்ணும் மேஜையின் மேல் எந்தெந்த ஊராட்சியின் வாக்குச்சாவடி எண் எண்ணப்படுகிறது என எழுத வேண்டும், ஒவ்வொரு சுற்றின்போதும் முடிவுகளை ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும், வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளை பண்டல் செய்து சிலிப் ஒட்டி சீலிடப்பட்டு பாதுகாப்பான முறையில் வைத்திட வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story