வாய்க்காலில் தவறி விழுந்து சிறுவன் சாவு


வாய்க்காலில் தவறி விழுந்து சிறுவன் சாவு
x
தினத்தந்தி 12 Oct 2021 7:51 PM GMT (Updated: 12 Oct 2021 7:51 PM GMT)

சுரண்டை அருகே வாய்க்காலில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

சுரண்டை:
சுரண்டை அருகே வாய்க்காலில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

5 வயது சிறுவன்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை சாவடி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவருடைய மகன் பரமேஷ் (வயது 5). இவன் நேற்று காலை அங்குள்ள சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்தான். 

இதற்கிடையே கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பெய்த மழை காரணமாக சாம்பவர் வடகரை பெரியகுளம் நிரம்பி உள்ளது. இதனால் சுரண்டை இரட்டை குளத்திற்கு ஊர்வழியாக செல்லும் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

தண்ணீரில் மூழ்கி சாவு

இந்த நிலையில் அந்த வாய்க்கால் கரையில் பரமேஷ் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது, திடீரென்று பரமேஷ் வாய்க்காலில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தண்ணீரில் மூழ்கிய அவன் பரிதாபமாக உயிரிழந்தான். 

இதுகுறித்து உடனடியாக சாம்பவர்வடகரை போலீசுக்கும், சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வாய்க்காலில் இறங்கி பரமேஷ் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவனது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

பரிதாபம்

பின்னர் சிறுவன் பரமேஷ் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுரண்டை அருகே வாய்க்காலில் சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story