சேதுபாவாசத்திரம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 1,050 கிலோ மீன்கள் ஏலம் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


சேதுபாவாசத்திரம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 1,050 கிலோ மீன்கள் ஏலம் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Oct 2021 8:01 PM GMT (Updated: 12 Oct 2021 8:01 PM GMT)

சேதுபாவாசத்திரம் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 1,050 கிலோ மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகள் ஏலம் விட்டனர்.

சேதுபாவாசத்திரம்:-

சேதுபாவாசத்திரம் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 1,050 கிலோ மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகள் ஏலம் விட்டனர்.

இரட்டைமடி வலை

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று அதிகாலை 4 மணி அளவில் தஞ்சாவூர் மீன்வளம் மற்றும் மீனவர் நல உதவி இயக்குனர் சிவக்குமார் தலைமையில் மீன்வள ஆய்வாளர்கள் துரைராஜ், ஆனந்த், கடல் அமலாக்கப்பிரிவு சார் ஆய்வாளர் நவநீதன், மீன்வள மேற்பார்வையாளர்கள் சண்முகசுந்தரம், சுரேஷ் ஆகியோரை கொண்ட குழுவினர் மனோரா கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் புறப்பட்டு கடலில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
இதேபோல் சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து மற்றொரு குழுவினர் ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த நீலகண்டன், மாரிமுத்து ஆகியோருக்கு சொந்தமான படகுகளில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்துவதற்கான உபகரணங்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

மீன்கள் ஏலம்

அவற்றை அதிகாரிகள் குழுவினர் பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு பிடிக்கப்பட்ட 1,050 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் கிடைத்த ரூ.16,800 அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.
தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய படகுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துகிறார்களா? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story