மாவோயிஸ்டு தலைவனின் மனைவி தங்கி இருந்த வீட்டில் அதிகாரிகள் சோதனை-சேலம் அருகே பரபரப்பு


மாவோயிஸ்டு தலைவனின் மனைவி தங்கி இருந்த வீட்டில் அதிகாரிகள் சோதனை-சேலம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 12 Oct 2021 10:21 PM GMT (Updated: 12 Oct 2021 10:21 PM GMT)

சேலம் அருகே மாவோயிஸ்டு தலைவனின் மனைவி தங்கி இருந்த வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர்:
சேலம் அருகே மாவோயிஸ்டு தலைவனின் மனைவி தங்கி இருந்த வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாவோயிஸ்டு தலைவன்
கேரளா மாநிலம் அட்டபாடியில் கடந்த 2019-ம் ஆண்டு மாவோயிஸ்டு கும்பல் தலைவன் மணிவாசகம், கேரளா போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல், சொந்த ஊரான சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி ராமமூர்த்தி நகரில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவரது ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தீவட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி மணிவாசகத்தின் மனைவி கலா (54), மணிவாசகத்தின் சகோதரி சந்திரா (42), மதுரை மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்த விவேக் என்ற விவேகானந்தன் (54), ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த லட்சுமி (45), லட்சுமியின் கணவர் சாலிவாகனன் (50), அதே பகுதியை சேர்ந்த சுதாகர் (25) என 6 பேர் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மணிவாசகத்தின் மனைவி கலா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதிகாரிகள் ஆய்வு
கலாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கலா, மணிவாசகத்தின் சகோதரி லட்சுமியின் வீட்டில் தங்கி இருந்து போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை 6 மணி அளவில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மணிவாசகத்தின் மனைவி தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story