4 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்


4 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Oct 2021 10:27 PM GMT (Updated: 12 Oct 2021 10:27 PM GMT)

தூத்துக்குடியில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 4 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக கிளீனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில்:
தூத்துக்குடியில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 4 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக கிளீனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலப்பட டீசல்
குமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டணம் மற்றும் சின்னமுட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்படி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான டீசல்களை அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. மேலும் சிலர் டீசலை வெளி மார்க்கெட்டில் இருந்தும் வாங்குவதும் வழக்கம். 
வெளி மார்க்கெட்டில் இருந்து வாங்கும் டீசலின் விலை அதிகம் என்பதால், இதனை பயன்படுத்தி சிலர் கலப்பட டீசலை விற்பனை செய்து வருகின்றனர். விலை குறைவு என்பதால் அதனை மீனவர்கள் வாங்கி தங்களது படகுகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதுபோன்று கலப்பட டீசல் விற்பனைக்கு  அரசு தடைவிதித்துள்ளது.
டிரைவர் தப்பி ஓட்டம்
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள மீன்படி துறைமுகங்களுக்கு வினியோகம் செய்ய டேங்கர் லாரியில் கலப்பட டீசல் அஞ்சுகிராமம் வழியாக வருவதாக நேற்று குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதனைதொடர்ந்து மதுரை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்ேகாவன் தலைமையில் குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப்பிாிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பேபி உள்பட போலீசார் நேற்று காலையில் அஞ்கிராமம் அஜந்தாசிட்டி பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக தூத்துக்குடி பதிவெண் கொண்ட ஒரு டேங்கர் லாரி வந்தது. உடனே போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் லாரியில் இருந்து தப்பி ஓடமுயன்ற 2 ேபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
கிளீனர்  உள்பட 2பேர் கைது
பின்னர் லாரியை சோதனை செய்தபோது, 4 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் லாரியுடன் கலப்பட டீசலை பறிமுதல் செய்தனர். இதனைதொடர்ந்து லாரி கிளீனர் தூத்துக்குடி மாதாகோவில் தெரு சேர்ந்த முருகன் (வயது 37), அஞ்சுகிராமம் மேட்டுக்குடியிருப்பை சேர்ந்த சிகாமணி(23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கலப்பட டீசல் தூத்துக்குடியில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த கடத்தலில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.  இதுதொடர்பாக குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய டிரைவரை தேடி வருகின்றனர். 

Next Story