நிதி நிறுவன அதிபர் கொலை: மனைவி, கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு- போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு


நிதி நிறுவன அதிபர் கொலை: மனைவி, கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு- போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Oct 2021 10:38 PM GMT (Updated: 12 Oct 2021 11:02 PM GMT)

தேவூர் அருகே நிதி நிறுவன அதிபர் கொலையில் கைதான அவருடைய மனைவி, கள்ளக்காதலன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தேவூர்:
தேவூர் அருகே நிதி நிறுவன அதிபர் கொலையில் கைதான அவருடைய மனைவி, கள்ளக்காதலன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நிதி நிறுவன அதிபர் கொலை
சேலம் மாவட்டம் தேவூர் அருகே புள்ளாகவுண்டம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் தயானந்தன் (வயது31). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தயானந்தனை அவருடைய மனைவி அன்னப்பிரியா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக்கொலை செய்ததும், கட்டிலில் இருந்து தயானந்தன் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்ததாக நாடகமாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தயானந்தனின் மனைவி அன்னப்பிரியா (21), மனைவியின் கள்ளக்காதலன் முகேஷ் என்ற முருகன் (21) இருவரையும் கைது செய்தனர்.
ரகசிய சந்திப்பு
கைதான அன்னப்பிரியாவிடம் போலீசார் வாக்குமூலம் வாங்கிய பிறகு, முகேசையும் தனி அறையில் வைத்து வாக்குமூலம் வாங்கினர். அந்த வாக்குமூலத்தில் முகேஷ் கூறியிருப்பதாவது:-
தயானந்தனின் உறவுக்கார பெண் ஒருவரிடம், என்னுடைய தந்தை எங்களது சொத்தை அடமானம் வைத்து ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனுக்கான வட்டியை கொடுப்பதற்காக தயானந்தனின் வீட்டுக்கு ஒவ்வொரு மாதமும் செல்வேன். அப்போது அன்னப்பிரியாவுக்கம், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போனில் பேசி எங்களது ரகசிய உறவை வளர்த்து வந்தோம். வீட்டில் யாரும் இல்லாத நேரம் அன்னப்பிரியா என்னை அழைப்பார். நான் அங்கு செல்வேன். இருவரும் ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருப்போம். இதனை ஒருநாள் தயானந்தன் பார்த்து விட்டார். எங்கள் இருவரையும் கண்டித்தார்.
திருமணம் செய்ய முடிவு
அதன்பிறகு அன்னப்பிரியாவை அவர் அடிக்கடி தொந்தரவு செய்ய தொடங்கினார். இதனை அன்னப்பிரியா என்னிடம் கூறி அழுவார். அவளுக்கு நான் ஆறுதல் கூறுவேன். அப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். ஆனால் தயானந்தன் உயிரோடு இருந்தால் நிம்மதியாக வாழ விடமாட்டார் என இருவரும் நினைத்தோம். எனவே அவரை கொலை செய்ய திட்டம் போட்டோம். எங்களது திட்டப்படி தயானந்தனை கொலை செய்தோம். கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டார் என நாடகம் ஆடினோம். ஆனால் போலீசாரின் கழுகு கண்களுக்கு எங்களால் தப்ப முடியவில்லை. சிக்கிக்கொண்டோம்.
இவ்வாறு அவர் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
போலீஸ் நிலையத்தில் திரண்ட மக்கள்
இதற்கிடையே போலீஸ் நிலையம் முன்பு தயானந்தன் வசித்து வந்த பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் கொலையாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 
நடித்துக் காட்டினர்
பொதுமக்கள் அதிக அளவு திரண்டு இருந்ததால் அன்னப்பிரியா, முகேஷ் இருவரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் தயானந்தனின் வீட்டுக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். அங்கு தயானந்தனை கொலை செய்தது எப்படி என்பது குறித்து அன்னப்பிரியாவும், முகேசும் போலீசாரிடம் நடித்துக் காட்டினர். பின்னர் இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இருவரையும் சங்ககிரி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அன்னப்பிரியாவைசேலம் சிறையிலும், முகேசை ஆத்தூர் சிறையிலும் அடைத்தனர்.

Next Story