கொலை செய்யப்பட்டாரா


கொலை செய்யப்பட்டாரா
x
தினத்தந்தி 13 Oct 2021 11:38 AM GMT (Updated: 13 Oct 2021 11:38 AM GMT)

பொங்கலூர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் பிணமாக கிடந்தவரின் தலையில் காயம் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பொங்கலூர்
பொங்கலூர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் பிணமாக கிடந்தவரின் தலையில் காயம் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
ஆண் பிணம்
பொங்கலூர் அருகே பெருந்தொழுவில் இருந்து முதலிபாளையம் செல்லும் பாதை அருகே பி.ஏ.பி. கிளை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் இந்த வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் மிதந்து வந்தது. இது தொடர்பாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று வாய்க்காலில் மிதந்தவரின் உடலை மீட்டனர். 
அப்போது பிணமாக மீட்கப்பட்டவரின் தலையில் காயம் இருந்தது. அந்த காயம் அரிவாளால் வெட்டப்பட்டது போல் தெரிந்தது. ஆனால் அவர் யார் எந்த ஊரை சேந்தவர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து அவர் அணிந்து இருந்த சட்டை மற்றும் பேண்ட் பாக்கெட்டில் அடையாளம் காணுவதற்கு உதவும் விதமாக செல்போன், முகவரி உடைய அட்டை ஏதும் உள்ளதா என்று போலீசார் தேடி பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை. இதனால் அவரை அடையாளம் காணுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 
கொலையா
இதையடுத்து அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார்? என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பி.ஏ.பி.வாய்க்காலில் குளிக்கும்போது தவறி தண்ணீருக்குள் விழுந்து இறந்து இருந்தால் தலையில் காயம் ஏற்பட வாய்ப்பு இல்லை. அப்படியே தண்ணீரில் விழுந்தாலும் கரையில் உள்ள கற்களில் தலை மோதி இருந்தால் தலை உடைந்து இருக்கும். ஆனால் தலையில் அரிவாளால் வெட்டப்பட்ட காயம் உள்ளது. எனவே அவரை மர்ம ஆசாமிகள் கொலை செய்து வாய்க்காலில் தள்ளி இருக்கலாம் என்று போலீசார் கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-----

Next Story