தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 Oct 2021 5:41 PM GMT (Updated: 13 Oct 2021 5:41 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல் : 

எலும்புக்கூடாக மாறிவரும் மின்கம்பம் 
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அருணாச்சலம் நகரில் மின்கம்பம் சேதமடைந்து எலும்புக்கூடு போல் மாறி வருகிறது. கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதே நிலை நீடித்தால் கம்பம் முறிந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரகுமான், அருணாச்சலம்நகர்.

குண்டும், குழியுமாக மாறிய சாலை
உத்தமபாளையத்தில் இருந்து கோம்பை செல்லும் சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் கடந்த ஆண்டு சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை அந்த சாலை வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் தான் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில், உத்தமபாளையம்.

தெருவிளக்குகள் இருந்தும் பயனில்லை
பள்ளப்பட்டி ஊராட்சி அந்தோணியார் தெருவில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகளுக்கான கட்டுப்பாட்டு கருவி, வேறு ஒரு தெருவில் உள்ள மின்கம்பத்தில் பொருத்தியுள்ளனர். சமூக விரோதிகள் சிலர் இரவில் அந்த கட்டுப்பாட்டு கருவியை செயல்படாமல் ஆக்கிவிடுகின்றனர். இதனால் அந்தோணியார் தெருவில் மின்விளக்குகள் இருந்தும் இரவு நேரத்தில் பயன்படாமல் உள்ளன. தெரு முழுவதும் இருள் சூழ்ந்துவிடுவதால் சமூக விரோத செயல்களும் அரங்கேறுகின்றன. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டு கருவியை அந்தோணியார் தெருவிலேயே அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தயாநிதி, அந்தோணியார்தெரு.

தார்சாலை இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி
நிலக்கோட்டை 8-வது வார்டு பகுதியில் உள்ள சாலை கடந்த பல மாதங்களாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவில் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் கீழே தவறி விழுந்து படுகாயமடையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூரியவிஜய், நிலக்கோட்டை.

குளங்களில் மண் அள்ளுவது தடுக்கப்படுமா?
பழனி தாலுகா சண்முகப்பாறை வாய்க்கால்பாலம் பகுதியில் உள்ள குளங்களில் சிலர் அனுமதியின்றி மண் அள்ளிச்செல்கின்றனர். இதனால் குளப்பகுதிகள் மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குளத்தில் மண் அள்ளுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கடகிருஷ்ணன், பழனி.

சாலையில் தேங்கும் சாக்கடை கழிவுநீர் 
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் தட்டாரப்பட்டி ஆர்.எச்.காலனியில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வடிவேல், ஆர்.எச்.காலனி.

Next Story