சோளிங்கரில் மாவட்ட கவுன்சிலர் வெற்றியை தவறாக அறிவித்ததாக பா.ம.க.வினர் மறியல்


சோளிங்கரில் மாவட்ட கவுன்சிலர்  வெற்றியை தவறாக அறிவித்ததாக பா.ம.க.வினர் மறியல்
x
தினத்தந்தி 13 Oct 2021 6:05 PM GMT (Updated: 13 Oct 2021 6:05 PM GMT)

சோளிங்கரில் மாவட்ட கவுன்சிலர் வெற்றியை தவறாக அறிவித்ததாகக்கூறி பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சோளிங்கர்

சோளிங்கரில் மாவட்ட கவுன்சிலர் வெற்றியை தவறாக அறிவித்ததாகக்கூறி பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தி.மு.க. வெற்றி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சோளிங்கர் ஒன்றியத்திற்குட்பட்ட 7-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க. சார்பில் சக்கரவர்த்தி போட்டியிட்டார். நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து சுற்றுகள் முடிந்த நிலையில் பா.ம.க. வேட்பாளர் சக்கரவர்த்தி, தி.மு.க. வேட்பாளரை விட 74 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். வெற்றி பெற்ற சான்றிதழ் வாங்குவதற்காக வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் சென்றபோது தேர்தல் அலுவலர் வேலாயுதம், தி.மு.க. வேட்பாளர் 500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தார். 

அதனைத் தொடர்ந்து பா.ம.க. வேட்பாளர் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென கூறினார். இரவு 12 மணி முதல் காலை 7 மணி வரை நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில், இறுதியாக ஒரு பூத் வாக்குகளை மட்டும் எடுத்து வந்து தேர்தல் அலுவலர் எண்ணினார். அப்போது திடீரென தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவித்தனர். 

சாலை மறியல்

அதைத்தொடர்ந்து பா.ம.க. வேட்பாளர் சக்கரவர்த்தி, பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர் அ.ம.கிருஷ்ணன் ஆகியோர் தேர்தல் அலுவலரிடம் முறையான வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்கவில்லை.

இதனால் தேர்தல் அலுவலரை கண்டித்து வாக்கு எண்ணிக்கை மையம் அருகே உள்ள சாலையில் 200-க்கும் மேற்பட்ட பா.ம.க. வினர்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Next Story