தற்கொலை செய்யப்போவதாக ஆடியோ வெளியிட்ட போலீஸ்காரர்


தற்கொலை செய்யப்போவதாக ஆடியோ வெளியிட்ட போலீஸ்காரர்
x
தினத்தந்தி 13 Oct 2021 7:27 PM GMT (Updated: 13 Oct 2021 7:27 PM GMT)

நெல்லையில் தற்கொலை செய்யப்போவதாக கூறி ஆடியோ வெளியிட்ட போலீஸ்காரரால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை:
நெல்லையில் தற்கொலை செய்யப்போவதாக கூறி ஆடியோ வெளியிட்ட போலீஸ்காரரால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ்காரர்

கடலூரைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 26). இவர் நெல்லை மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவர் தான் தற்கொலை செய்யப் போவதாக கூறி வெளியிட்ட ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-

விடுமுறை தரவில்லை

கடந்த 29-ந் தேதி எனது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்று வீட்டிலிருந்து போன் வந்தது. எனது மனைவி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். உடனே நான் எனது உயர் அதிகாரி ஒருவரிடம் 4 நாட்கள் விடுமுறை கேட்டேன். அப்போது அவர் 4 நாட்கள் தான் விடுமுறை தரமுடியும். உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் பாதுகாப்பு பணிக்கு கண்டிப்பாக வந்துவிட வேண்டும் என்று கூறினார். பின்னர் நான் எனது ஊருக்கு புறப்பட்டு சென்றேன். அங்கு எனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த மறுநாளே குழந்தை இறந்துவிட்டது.

நான் உயர் அதிகாரியிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தேன். அதற்கு அவர் 4 நாட்களுக்கு மேல் விடுப்பு தர முடியாது. 6-ம் தேதி தேர்தல் முடிந்ததும் விடுமுறை எடுத்துக்கொள் என்று கூறினார். பின்னர் நான் பணிக்கு வந்துவிட்டேன்.

தற்கொலை செய்து கொள்ள போகிறேன்

கடந்த 6-ந் தேதி இரவு எனது குழந்தைக்கு காரிய சடங்குகள் செய்ய வேண்டும் என்று கூறி விடுமுறை கேட்டேன். ஆனால், அதற்கு அவர் விடுமுறை தர முடியாது. 12-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின்னர் தான் பார்க்க முடியும் என்று கூறினார்.

பழி வாங்கும் நோக்கில் எனக்கு டியூட்டி போடுகின்றனர். அதனால் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆகையால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துவிட்டேன்.
இவ்வாறு அந்த ஆடியோவில் கூறிஇருந்தார்.

விசாரணை

இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆயுதப்படை போலீஸ் உயர் அதிகாரி கூறியபோது, ‘இதுபற்றி அலெக்சை அழைத்து விசாரணை நடத்தினோம். அப்போது அவர் நான் என் குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக இப்படி செய்து விட்டேன்.
ஆனால் நான் விஷம் எதுவும் அருந்தவில்லை. இனி இதுபோன்று செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story