தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 19 Oct 2021 8:03 PM GMT (Updated: 19 Oct 2021 8:03 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

கிணற்றை தூர்வார வேண்டும்
தோவாளை அருகே உள்ள புதூர் முதல் காலனியில் 2 குடிநீர் கிணறுகள் இருந்தன. அந்த பகுதியில் உள்ள மக்கள் இந்த கிணற்றை பயன்படுத்தி வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிணறு முற்றிலும் மூடப்பட்டது. மீதமுள்ள ஒரு கிணற்றை முறையாக பாராமரிக்கப்படாமல் குடிநீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிணற்றை தூர்வாரி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விக்னேஷ், தோவாளை புதூர்.
குண்டும், குழியுமான சாலை
நாகர்கோவிலில் இருந்து நெல்லை செல்லும் சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த சாலை  ஒழுகினசேரி பாலம் பகுதியில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், சாலையில் செல்லும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. பாதசாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                   - விஜயன், ஒழுகினசேரி.
தொற்றுநோய் பரவும் அபாயம்
தெங்கம்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஓ.காலனி எஸ்.எம்.ேக. நகரில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மழை காரணமாக தண்ணீர் தேங்கி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. தென்னந்தோப்புகளில் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குடியிருப்பு பகுதிகளில் தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                 - அமிர்த ரூபன், குஞ்சன்விளை.
சேதமடைந்த தரைப்பாலம்
கீரிப்பாறையில் இருந்து காளிகேசம் செல்லும் சாலையில் ஒரு தரைபாலம் உள்ளது. தொடர் மழையால், தரைபாலத்தை மூழ்கடித்தபடி மழை வெள்ளம் சென்றது. அப்போது, தரைப்பாலம் சேதமடைந்தது. தற்போது தண்ணீர் அளவு குறைந்து செல்கிறது. வெள்ளத்தால் பாலம் சேதமடைந்ததால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி தரைபாலத்தை போர்கால அடிப்படையில் விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                   -மணிகண்டன், கீரிப்பாறை.
குப்பைகளை அகற்ற வேண்டும்
கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தின் எதிரே பழையாறு ஓடுகிறது. மழையால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஒரு பெரிய பனை மரத்தின் மேல்பகுதி மிதந்து வந்தது. தற்போது வரை பனை மரத்தின் பகுதி அகற்றப்படாமல் ஆற்றின் நடுவே தடுப்புபோல் இருந்து வருகிறது. இதனால், செடி கொடிகள், குப்பைகள் குவிந்துள்ளன. இதனால் தண்ணீரும் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே, அதிகாரிகள் பனைமரம் மற்றும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                   -சீத்தாராமன், கொட்டாரம்.
மின்கம்பத்தை ஆக்கிரமித்த செடிகள்
நாகர்கோவில் ராணித்தோட்டம் அருகே வடக்கு தெருவில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் மின்கம்பமே தெரியாத அளவுக்கு செடி, கொடிகள் மறைத்துள்ளது. விஷ பூச்சிகளின் நடமாட்டமும் காணப்படுகிறது. இது குழந்தைகள் விளையாடும் பகுதியாகும். எனவே, மின்கம்பத்தை சுற்றியுள்ள செடி கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                    -எபின், ராணித்தோட்டம்.
தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்
இலவுவிளையில் இருந்து பேயன்காட்டுவிளை செல்லும் சாலை உள்ளது. சாலையின் ஒரு பகுதி மிக குறுகலான திருப்பத்தை கொண்டது. திருப்பத்தையொட்டி ஒரு வடிகால் ஓடையும் உள்ளது. இந்த திருப்பத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, சாலையோரம் தடுப்பு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                        -கிருஷ்ணமணி, நல்லூர்.







Next Story