தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 21 Oct 2021 8:01 PM GMT (Updated: 21 Oct 2021 8:01 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

அடிக்கடி மின்தடையால் அவதி
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் விசைத்தறி பிரதான தொழிலாக உள்ளது. இந்த தொழிலுக்கு மின்சாரம் மிக மிக அவசியம். கடந்த 2 வாரங்களாக வெண்ணந்தூரில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் பெரும்பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் கூலி தொழிலாளர்கள் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தடையில்லா மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-கே.சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.
முட்புதர்கள் அகற்றப்படுமா?
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு தங்கசாலை தெருவில் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த பகுதியில் முட்புதர்கள் முளைத்து புதர் போன்று காட்சி அளிக்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பகுதியில் ஏராளமான வீடுகள், 2 தொடக்கப்பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிக்கூடம் உள்ளது. புதரில் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு விஷ பூச்சி்களால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஏ.எம்.மோகனவேல், வெண்ணந்தூர், நாமக்கல்.
சாலையில் தேங்கும் கழிவுநீர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் சாலை ராஜீவ்நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்ங அந்த பகுதியில் சாலையில் தேங்கி கிடக்கிறது. அதிலும் மழை பெய்யும் போது மழைநீரும், சாக்கடை நீரும் சாலையில் குளம் போல் காட்சி அளிக்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், ராஜீவ்நகர், கிருஷ்ணகிரி.
சேலம் அம்மாபேட்டை தங்கசெங்கோடு தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் சாக்கடை கால்வாயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்மக்கள், தங்கசெங்கோடு, சேலம்.
சேலம் மாவட்டம் மேட்டூர் 10-வது வார்டு எம்.ஜி.ஆர். நகர் மின்மயானம் செல்லும் வழியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சாக்கடை கால்வாய் பணிகள் முழுமையாக நடைபெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாக்கடை கால்வாயில் நிரம்பி கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் நோய் அந்த பகுதியில் காய்ச்சல், அலர்ஜி உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், எம்.ஜி.ஆர்.நகர், சேலம்.
ஆபத்தான மின்கம்பம்
சேலம் சின்னகடை வீதி அதியமான் தெரு, வைரகாளியம்மன் கோவில் அருகில் மின்கம்பம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கோவிலுக்கு ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். மழைக்காலம் என்பதால் ஏதும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றி புதிய மின்கம்பம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், சின்னகடைவீதி, சேலம்.
சேலம் தேக்கம்பட்டி 12-வது வார்டு மாரியம்மன் கோவில் பின்புறம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மின்கம்பத்தை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், தேக்கம்பட்டி, சேலம்.
எரியாத தெருவிளக்குகள்
சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் பேரூராட்சி 7-வது வார்டு கம்போஸ்ட் ரோட்டில் தெருவிளக்குகள் 4 மாதங்களாக எரியவில்லை. இதுபற்றி புகார் தெரிவித்தும் மின்வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரவு நேரங்களில் பொதுமக்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே மின்வாரிய உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருவிளக்கு எரியச் செய்ய வேண்டும்.
-சேவி, ஜலகண்டபுரம், சேலம்.
பயன்பாடு இல்லாத நூலகம் 
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா ஏலகிரியான் கொட்டாய் கிராமத்தில் ரேஷன் கடை மற்றும் நூலகம் அமைந்துள்ளது. இங்கு கால்நடைகள் கட்டுவது மட்டும் இல்லாமல் அவற்றிற்கு தீவனம் வைக்கும் இடமாகவும் அவை மாறி விட்டது. இதுதவிர அந்த பகுதி சில சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாகவும் மாறி விட்டது. இதில் அதிகாரிகள் தனிகவனம் செலுத்தி பயன்பாடு இல்லாத இந்த நூலகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்பொதுமக்கள், தர்மபுரி.
தெருநாய்கள் தொல்லை
சேலம் பொன்னம்மாப்பேட்டை செங்கல் அணை ரோடு 9-வது வார்டில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தெருநாய்களால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், பொன்னாம்மாப்பேட்டை, சேலம்.
தேங்கி கிடக்கும் மழைநீர் 
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா எட்டிக்குட்டையில் மாரியம்மன் கோவில் அருகே மழைநீர் வழிந்தோட இடம் உள்ளது. இவ்வழியேதான் பல ஆண்டுகளாக மழை நீர் சென்றது. இவ்வழியை அடைத்துள்ளதால் கோவில் அருகே மழைநீர் தேங்குவதால் சேரும் சகதியுமாக தெரு காட்சி அளிக்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு உடல் உபாதைகளும் ஏற்பட்டுள்ளன. எனவே அந்த பகுதியில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், எட்டிக்குட்டை, தர்மபுரி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
சேலம் ஓமலூர் காமண்டப்பட்டி ரோடு சாரதா நகர் 14-வது வார்டில் சாலை ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அந்த இடத்தில் குப்பைத்தொட்டி இல்லாததால் மாதக்கணக்கில் குப்பைகளை அங்கு கொட்டி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலை சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை சாலை சரிசெய்யப்படவில்லை. எனவே குப்பைகளை அள்ளுவதுடன், அங்கு குப்பைத்தொட்டி வைக்க வேண்டும். மேலும், சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், சாரதா நகர், சேலம்.

Next Story