தூத்துக்குடியில் வங்கிகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கடன் வழங்கி இருப்பது தொழில் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் கனிமொழி எம்பி பேச்சு


தூத்துக்குடியில் வங்கிகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கடன் வழங்கி இருப்பது தொழில் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும்  கனிமொழி எம்பி பேச்சு
x
தினத்தந்தி 22 Oct 2021 12:40 PM GMT (Updated: 22 Oct 2021 12:40 PM GMT)

தூத்துக்குடியில் வங்கிகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கடன் வழங்கி இருப்பது தொழில் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்று கனிமொழி எம்பி கூறினார்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வங்கிகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கடன் வழங்கி இருப்பது தொழில் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
கடன் மேளா
தூத்துக்குடி ஸ்டேட் வங்கி மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில் மெகா கடன் மேளா தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழக பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் ராயபரம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, 2 ஆயிரத்து 431 பயனாளிகளுக்கு ரூ.129.22 கோடி கடன் ஆவணங்களை வழங்கினர்.
உத்வேகம்
நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
கொரோனா காரணமாக வியாபாரிகள், பொதுமக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்த நிலையில் இந்த லோன் மேளா நடத்தப்படுகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதாரம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் தொழில்களை மீட்டுக் கொண்டு வரவும், விவசாயம், சிறு குறு தொழில்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் அனைத்தும் பயன்பெறும்.
கடன் தொகைகளை பெறுவது மட்டுமின்றி அதை திருப்பி செலுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இது போல் வங்கிகளும் கடன் பெற்றவரிடம் உரிய முறையில் கடன்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை வங்கிகள் தனது இலக்கை தாண்டி கடன் வழங்கி உள்ளது பாராட்டக் கூடியது. இது தொழில் வளர்ச்சிக்கு உத்வேகமாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கி தலைமை பொது மேலாளர் சிவானந்த், தூத்துக்குடி உதவி பொது மேலாளர் துரைராஜ், முன்னோடி வங்கி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், தி.மு.க. மாணவரணி மாநில துணை செயலாளர் உமரிசங்கர், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பட்டா சிறப்பு முகாம்
தொடர்ந்து முத்தையாபுரம் பகுதியில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான மனுக்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முகாமை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இந்த முகாமில் மொத்தம் 360 மனுக்கள் பெறப்பட்டன.
முடிவில் தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின் செல்லத்துரை நன்றி கூறினார்.
--------------------

Next Story