சாத்தான்குளத்தில் பெண்ணிடம் நகை பறித்த 2 வழிப்பறி திருடர்கள் சிக்கினர்


சாத்தான்குளத்தில் பெண்ணிடம் நகை பறித்த 2 வழிப்பறி திருடர்கள் சிக்கினர்
x
தினத்தந்தி 22 Oct 2021 3:00 PM GMT (Updated: 22 Oct 2021 3:00 PM GMT)

சாத்தான்குளத்தில் பெண்ணிடம் நகை பறித்த 2 வழிப்பறி திருடர்கள் சிக்கினர்

சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் நேற்று பெண்ணிடம் நகை பறித்த 2 வழிப்பறி திருடர்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மசாலா கம்பெனி ஊழியர்
மேல சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கிருபைராஜ் மனைவி புஷ்பலதா (41). இவர் மசாலா கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு செல்வதற்காக இட்டமொழி சாலையில் காமராஜ் நகர் விலக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில்  வேகமாக வந்த 2 திருடர்கள் அவரை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்கசங்கிலியை பறித்தனர். அவர்களிடம் புஷ்பலதா போராடினார். ஆனாலும் அவர்கள் பலமாக அவரை தாக்கிவிட்டு சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தினர்.
பொதுமக்களிடம் சிக்கினர்
சுதாரித்துக் கொண்ட புஷ்பலதா போட்ட கூச்சலில் அக்கம் பக்கத்தில் நின்று கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.
சிலர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வழிப்பறி திருடர்களை துரத்தினர். சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தில் வைத்து அந்த 2 பேரையும் மோட்டார் சைக்கிளுடன் மடக்கி பிடித்தனர். அதற்குள் மேலும் சிலரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
2 பேர் கைது
பொதுமக்கள் அந்த 2 திருடர்களுக்கும் தர்ம-அடி கொடுத்து சாத்தான்குளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அந்த திருடர்களிடம் விசாரணை நடத்தினார். 
 விசாரணையில், அவர்கள் விஜயநாராயணம் ஆணியன்குளத்தைச் சேர்ந்த சங்கரன் மகன் முத்துக்குமார் (38), வல்லநாடு சந்திரன் மகன் ராஜேஷ் (30) என தெரியவந்தது. இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை மீட்கப்பட்டது.

Next Story