சென்னையில் கொரோனா தடுப்பூசி போடுவோருக்கு குலுக்கல் முறையில் விதவிதமான பரிசு


சென்னையில் கொரோனா தடுப்பூசி போடுவோருக்கு குலுக்கல் முறையில் விதவிதமான பரிசு
x
தினத்தந்தி 24 Oct 2021 9:25 AM GMT (Updated: 24 Oct 2021 9:25 AM GMT)

சென்னையில் கொரோனா தடுப்பூசி போடுவோருக்கு குலுக்கல் முறையில் விதவிதமான பரிசு வழங்கப்பட்டது. மாநகராட்சியின் கவனம் ஈர்க்கும் நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிகிறது.

சென்னை,

தமிழகம் முழுவதும் நடைபெற்ற 6-வது மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் வரிசையாக காத்திருந்து ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தடுப்பூசி முகாம் நடந்தது.

இதில் அந்த பகுதியை சேர்ந்த சாலையோர வியாபாரிகள், ஓட்டல் ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி பி.சதீஷ்குமார் தலைமையில் என்.ராஜா உள்பட அதிகாரிகள், சாலையோர வியாபாரிகளுக்கு தடுப்பூசியின் அவசியம் மற்றும் உணவு பொருள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தடுப்பூசி போடாத வியாபாரிகளின் பட்டியல் தயார் செய்யும் பணியும் முன்னெடுக்கப்பட்டது.

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில்தான் கொரோனாவின் ஆட்டம் தாண்டவமாடியது. தற்போது அந்த மண்டலத்தில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவின் பேரில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த மண்டலத்தில், மாநகராட்சி சுகாதார உதவி அதிகாரி டாக்டர் வேல்முருகன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் அலெக்ஸ்பாண்டியன், செந்தில், மணிகண்டன் உள்ளடங்கிய குழு முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ராயபுரத்தில் 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்டும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி போடும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் தனியார் உதவியுடன் மாநகராட்சி பல்வேறு பரிசு பொருட்களையும் அறிவித்து ஆச்சரியம் அளித்து வருகிறது. முதல் தவணை தடுப்பூசி போடுவோருக்கு அந்தந்த முகாம்களில் குலுக்கல் முறையில் வெள்ளிக்காசு, குக்கர், நான் ஸ்டிக் தவா, ஹாட் பாக்ஸ், 3 லிட்டர் சமையல் எண்ணெய் உள்பட பல்வேறு பரிசுகளை வழங்கி மாநகராட்சி கவனம் ஈர்த்து வருகிறது. மாநகராட்சியின் இந்த கவனம் ஈர்க்கும் நடவடிக்கைக்கு பாராட்டும் குவிகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டில் தமிழகத்தில் சென்னை தான் கொரோனா புரையோடி கிடந்த மாவட்டமாக இருந்தது. அதில் ராயபுரத்தில் தான் பாதிப்பு சதவீதமும் மிகுதியாக இருந்தது. தொடர் நடவடிக்கைகள் மூலம் அந்த நிலை மாறி வருகிறது. விரைவில் ராயபுரம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மண்டலம் எனும் சிறப்பை அடையும். அதேவேளை இதர மண்டலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. பரிசு பொருட்கள் கொடுப்பது என்பது மக்களின் ஆர்வத்துக்கு தீனி போடும் ஒரு சாதாரண முயற்சி தான். தற்போது மக்களுக்கே தடுப்பூசி போடும் ஆர்வம் வந்துள்ளது என்பது தான் உண்மை’’, என்றனர்.

Next Story