ஷாருக்கான் பா.ஜனதாவில் இணைந்தால் போதைப்பொருள், சர்க்கரை பொடியாக மாறிவிடும்-சகன் புஜ்பால் கிண்டல்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 24 Oct 2021 7:16 PM GMT (Updated: 24 Oct 2021 7:16 PM GMT)

ஷாருக்கான் பா.ஜனதாவில் இணைந்தால் போதைப்பொருள், சர்க்கரை பொடியாக மாறிவிடும் என சகன் புஜ்பால் கூறியுள்ளார்.

மும்பை, அக்.

ஷாருக்கான் பா.ஜனதாவில் இணைந்தால் போதைப்பொருள், சர்க்கரை பொடியாக மாறிவிடும் என சகன் புஜ்பால் கூறியுள்ளார்.

சர்க்கரையாக மாறும்
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை சமீபத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். மும்பை-கோவா சொகுசு கப்பலில் ஆர்யன் கானுடன் இருந்தவர்களிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஆர்தா்ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்தநிலையில் நடிகர் ஷாருக்கான் தற்போது பா.ஜனதாவில் இணைந்தால் போதைப்பொருள் சர்க்கரை பொடியாக மாறிவிடும் என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மந்திரியுமான சகன் புஜ்பால் கூறியுள்ளார்.

முந்த்ரா துறைமுகம்
இது குறித்து அவர் பீட் மாவட்டத்தில் நடந்த விழாவில் பேசும் போது கூறியதாவது:-

‘‘குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது குறித்து விசாரணை நடத்தாமல் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஷாருக்கானை சுற்றி வருகின்றனர். ஒருவேளை ஷாருக்கான் பா.ஜனதாவில் இணைந்தால், போதைப்பொருள் சர்க்கரை பொடியாக மாறிவிடும்.

 பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசு தீர்மானம் கொண்டு வருகிறது.

 அதை எதிர்த்து பா.ஜனதா நிர்வாகி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். பா.ஜனதா பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீடுக்கு எதிராக உள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story